Friday 15 March 2013

தண்ணீரில் எரியும் விளக்கு.!

யோக மார்க்கத்தில் உள்ள சில பயிற்சிகளை சிரத்தையோடு தொடரச்சியாக செய்யும் போது ஒவ்வொரு சாதகனுக்கும் சித்துக்கள் என்ற இயற்கையை கட்டுபடுத்தும் ஆற்றல் இயல்பாக கிடைக்கிறது. அப்பாடி சித்துக்களை பெற்ற எவரும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய அனாவசியமான வேளையில் அதை பயன்படுத்துவது கிடையாது காரணம் இறைவனை அடைவது ஒன்றே யோக மார்க்கத்தின் குறிக்கோள் என்பதனால் சித்துக்கள் மாயா சக்தி என்றும் சாதனையாளர்களை தவறான பாதையில் வழிநடத்தும் என்றும் கருதப்பட்டு அவைகள் ஒதுக்கபடுகின்றன நிறைநிலை அடைந்த ஞானிகள் சித்துக்களை மலம் என்றே அழைக்கிறார்கள் எனவே நாம் தவம் செய்து பெறுகின்ற சித்துக்களை இங்கு பேச வேண்டாம் சாதாரண மனிதர்கள் சுயலாபத்திற்க்காக பயன்படுத்தும் சித்துக்களின் ரகசியத்தை சிறிது ஆராய்வோம்

உலகில் எந்த நாட்டு மூலிகைக்கும் இல்லாத சிறப்புகளும் சக்திகளும் தமிழ்நாட்டு மூலிகைகளுக்கு நிறையவே உண்டு இந்த மூலிகைகளின் ரகசியங்களை நமது முன்னோர்கள் மிக நன்றாக அறிந்திருந்தார்கள். மூலிகைகளில் உள்ள ரகசிய சக்திகளை எப்படி பயன்படுத்துவது என்பது அவர்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. தாங்கள் கற்ற பாடுபட்டு பெற்ற ரகசியங்களை பல ஏடுகளில் ஆவணங்களாக எழுதிவைக்கவும் செய்திருக்கிறார்கள். அவற்றை படிக்கும் போது நமக்கு வியப்பு மட்டுமல்ல இப்படியெல்லாம் கூட இருக்குமா என்ற மலைப்பும் ஏற்படுகிறது.

நீங்கள் தெருவோரங்களில் மோடிமஸ்தான்கள் செய்கின்ற வித்தைகளை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் அந்த வித்தைகளில் மிக முக்கியமாக சிறிய கிண்ணத்தில் விதைக்கப்படும் கம்பம்புல் சில நிமிட நேரத்திலேயே வளர்ந்து கதிர்சாய்வதை பார்க்க தவறியிருக்க மாட்டீர்கள் ஒரு விதை முளைத்து பயிர் தர வேண்டுமென்றால் குறைந்தது மூன்றுமாத காலமாவது ஆகவேண்டும். ஆனால் சில நிமிட நேரங்களில் மோடிமஸ்தான்கள் பயிர் வளர வைப்பது மந்திர சக்தியால் இருக்கலாமோ? என்று எண்ண தோன்றும். ஆனால் உண்மையில் இதற்கு மந்திரம் வேண்டாம் மூலிகைகளால் தந்திரம் செய்ய கற்றிருந்தால் போதும்

மிக சாதாரணமாக கிடைக்கும் நாட்டு கோழி முட்டையில் கம்பம்புல்லை மூன்று நாட்கள் ஊறவைத்து அதை வித்தை காட்டும் மைதானத்தில் மண்ணில் புதைத்து சில ஒழுங்கு முறைப்படி வெளிச்சம் படும்மாரும் இருட்டு சூளுமாரும் மூடி மூடி திறந்தால் பருவநிலை மாற்றம் போன்ற நிகழ்வு விதைக்கு ஏற்பட்டு அது சில நிமிடங்களில் வளர்ந்து கதிர் தள்ளிவிடுகிறது இதை சோதனைக்காக நீங்கள் கூட செய்து பார்க்கலாம் இதை போலவே பச்சை தவளையின் நெய்யை எடுத்து கைகளில் பூசி கொண்டால் கொதிக்கும் எண்ணெயில் கூட கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கையை முக்கி எடுக்கலாம்.

சில மந்திர வாதிகளும் சாமியார்களும் பஞ்சு திரி போட்டு எண்ணெய்க்கு பதிலாக பச்சை தண்ணீர் ஊற்றி விளக்கெரிப்பதை அறிந்த்ருப்பீர்கள் இந்த காலத்தில் கடைகளில் கிடைக்கும் எண்ணெய் கலப்படமாகி விட்டதனால் அவற்றை ஊற்றி கூட தீபம் ஏற்றுவது மகா சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் தண்ணீர் விட்டு தீபம் ஏற்றுவது கற்பனை கூட செய்துபார்க்க முடியாத காரியமாக தெரியலாம். சற்று பொறுமையும் கூர்மையான அறிவு இருந்தால் உங்களால் கூட தண்ணீரில் விளக்கேற்ற முடியும்.

அத்தி பழத்தை பிய்த்து பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று ஒரு பழமொழியை நீங்கள் அடிக்கடி கேட்டிருக்கலாம் பூக்களே பூக்காமல் பழங்களை பழுக்கும் அதிசய மரம் அத்தியாகும். இந்த அத்திமர வேரில் அதிகாலை வேளையில் கத்தியால் கீறினால் ஒருவித நீர் சுரக்கும் இதை அத்திபால் என்று சொல்வார்கள். அத்திபாலில் பருத்தி திரியை ஊறவைத்து பிறகு வெயிலில் உலர்த்தி பத்திரபடுத்தி கொள்ளவும் பிறகு விளக்கில் தண்ணீரை ஊற்றி இந்த திரியை போட்டு தீபம் ஏற்றினால் மிக அருமையாக விளக்கு எரியும்.

களிமண்ணையும் செம்மண்ணையும் பிசைந்து சிவலிங்கம் செய்வதை பார்த்திருப்போம் ஆற்றுமணலில் சிவலிங்கம் செய்ய முடியும் என்று யாரவது சொன்னால் அவனை அறியாத பிள்ளை அல்லது அறிவு வளராத ஜென்மம் என்று கேலி பேசுவோம். நிஜமாகவே ஆற்றுமணலை மட்டுமல்ல கடல் மணலை கூட பிசைந்து சிவலிங்கம் செய்யலாம் அதற்கு தேவையானது தண்ணீர் விட்டான் கிழங்கு என்ற ஒரு வித மூலிகையே இப்படி எவ்வளவோ விஷயங்கள் மறைந்து போய் சிலபேருக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கிறது இதை பலபேரும் அறிந்துகொள்ளும் படி செய்தால் பல சங்கடங்களை விலக்கலாம் அதற்கு தேவை உழைப்பும் ஆர்வமும் பொறுமையும் இந்த மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்கள் கூட அதிசயங்களை நிகழ்த்தலாம்.

No comments:

Post a Comment