Thursday 31 October 2013

சத்குரு அவர்களை வரவேற்று....



(2010 ஆம் ஆண்டு..மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அயல்நாட்டுப் பயணங்களிலிருந்து சத்குரு திரும்பினார். சுவாமி ஆதிரூபா கேட்டபடி சத்குருவை வரவேற்று எழுதித் தந்த பாடல் இது...)


பல்லவி
வருக வருக எங்கள் வான்மழையே-எங்கள்
வாழ்வில் இனிக்கிற தேன்துளியே
தருக தருக உந்தன் தரிசனமே-எட்டுத்
திசைகள் அளந்துவரும் பூரணமே
 
சரணம்-1
திருவடி பாராமல் திருமுகம் காணாமல்
தினமொரு யுகமாய் கழிந்தது
குருநிழல் சேராமல் அருள்மொழி கேளாமல்
திசைகளும் இருளாய் இருந்தது
 
மாதங்கள் பறந்தன மாதவமே
மனமெங்கும் நிறைந்தது உன்முகமே
வான்வழி வந்தது எம்தவமே-எங்கள்
வாசலில் நின்றது வானகமே
 
 
சரணம்-2
ஒளிதரும் கிழக்காக கலங்கரை விளக்காக
பகலிலும் இரவிலும்  துணைநீ
துளிவினை படியாமல் தொடர்கதை தொடராமல்
தூயவனே எங்கள் கதிநீ
 
நீவரும் திசையினில் கண்ணிருக்க-உன்
நினைவினில் எப்போதும் நெஞ்சிருக்க
தாய்முகம் தேடிடும் சேய்களைப்போல்-எங்கள்
தவிப்பிலும் உந்தன் சிரிப்பிருக்க....

வருக வருக எங்கள் வான்மழையே-எங்கள்
வாழ்வில் இனிக்கிற தேன்துளியே
தருக தருக உந்தன் தரிசனமே-எட்டுத்
திசைகள் அளந்துவரும் பூரணமே

No comments:

Post a Comment