Monday 25 June 2012

10,069 பங்கேற்பாளர்களும், 2000 தன்னார்வத் தொண்டர்களும் சத்குரு நடந்து வரும் அந்த நடைமேடையை நோக்கி கூப்பிய கரங்களுடன் கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு, நெஞ்சில் ஆழ்ந்த அமைதியோடு நகர்கிறார்கள். அனைவருடனும் சத்குரு, கூப்பிய கரங்களுடன் கண்கள் ஈரமாக…

முதல் முறையாக தன்னார்வத் தொண்டு புரிவதற்காக பாண்டிச்சேரி வகுப்புக்கு சென்னையில் இருந்து வந்திருந்த திருமதி. மஹேஷ்வரி, இங்கு நடந்த நிகழ்வுகளைப் பார்த்து பிரமித்துப் போய் பகிர்ந்து கொள்கிறார்.

“இங்கு வருவதற்கு முன்பு சந்தேகங்களின் குவியல்களாக இருந்த மக்களின் இதயங்களை சத்குருவின் சக்திவட்டம் ஆட்கொண்டுவிட்டது.

பெற்ற தாயால் மகனை மாற்ற முடியவில்லை. ஆசிரியரால் மாணவர்களை மாற்ற முடியவில்லை. முதலாளிகள் தொழிலாளர்களை திருப்திபடுத்த முடியவில்லை. சத்குரு என்ற ஒரு தனிமனிதர் இந்த 2 1/2 நாட்களில் 10,069 மக்களை எந்தவித போதனையும் இன்றி அவர்களது வாழ்வின் அடிப்படையையே மாற்றியது எப்படி?

ஏன் சத்குருவை விளம்பரம் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்டவர்கள் அனைவரும் சத்குரு போன்ற ஒரு மனிதரை உலகம் முழுவதும் தெரியப்படுத்தாவிட்டால், அது நமது தலைமுறையின் குற்றமாகிவிடும் என்று இப்போது கூறுகிறார்கள்.

சத்குரு அப்படி என்ன செய்தார்? பித்தளையை தங்கமாக்கினாரா? காற்றிலிருந்து விபூதி எடுத்தாரா? எதுவும் இல்லை. பிறகு அப்படி என்னதான் நடந்தது?

ஒவ்வொருவரையும் உள்நிலையில் இயல்பாக மலரச் செய்தார்.

இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பரிமாணமாக இருந்தாலும் கடினமான வழி அல்ல. விருப்பதோடு வந்து அமர்ந்தால் சாதாரண மனிதரும் எளிதில் இதை உணர்ந்து செல்ல முடியும். என்று கண்ணீர் மல்க நம்மிடம் பகிர்ந்து கொண்டு, உள்ளே செல்கிறார், தானும் சத்குருவுடன் சேர்ந்து கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள…

இந்த வகுப்பின் வெற்றிக்கு, ஈஷா-பாண்டிச்சேரி மக்களின் அன்பும் ஈடுபாடும்தான் காரணம் என்று மீண்டும் மீண்டும் சொல்லி பெருமிதம் அடைந்த சத்குரு, இவ்வளவு சிறிய நகரில் 10,000திற்கும் மேற்பட்ட மக்களை ஒரே இடத்தில் பிசிரில்லாமல் ஒருங்கிணைத்து அற்புதம் நிகழ்த்தி இருக்கிறார்கள் இவர்கள் என்றும் பாராட்டினார்.

“நீங்கள் திறந்த நிலையில் இருந்தால் ஒவ்வொரு ஷணமும் உங்களுடன் இருப்பேன்,” என்ற சத்குருவின் சத்திய வார்த்தைகள் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது…

பிரிய மனமில்லாமல் தன்னை சூழ்ந்துக் கொண்ட கூட்டத்திடம் கை கடிகாரத்தை காட்டி பிரிந்து சென்றார் சத்குரு

No comments:

Post a Comment