Wednesday 6 February 2013


இந்த பதிவின் முதல் பகுதியில் திருமணம் தனிமனித தேர்வு என்று பார்த்தோம், ஆனால் தனியொருவருக்கு திருமணம் தேவையா, இல்லையா என்பதை எதை வைத்து தீர்மானிப்பது? இதோ விடை சொல்லும் இரண்டாம் பாகம் உங்களுக்காக…
சத்குரு:
ஒரு மனிதனாக உங்களுக்கு துணை கட்டாயமாக தேவையா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். நம் மக்கள் தொகையில் குறைந்தது 25 லிருந்து 30 சதவிகிதம் மக்கள் திருமண உறவு தேவைப்படாதவர்களாய் உள்ளனர். இந்த உடல் தேவை அவர்களுக்கு சில காலத்திற்கு மட்டுமே இருக்கிறது.
இன்னொரு சாரார் உள்ளனர். அவர்களுக்கு அவர்களின் உடல் தேவை இன்னும் சற்று அதிக காலத்திற்கு இருக்கிறது. இவர்கள் ஒரு முப்பதிலிருந்து நாற்பது விழுக்காட்டிற்குள் உள்ளனர். இவர்களுக்கு உடல் சம்பந்தமான உறவுகளின் தேவை இன்னும் அதிக நாட்களுக்கு நீடிப்பதால் இந்த உறவில் ஈடுபடுகிறார்கள். பத்திலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் சிறப்பாக உணர்கிறார்கள். அதன்பின்? திருமணம் பாரமாகி விடுகிறது.
வேறு ஒரு வகையினர் உள்ளனர். அவர்களுக்கு சற்று அதிகமாகவே உடல் தேவை உள்ளது. இவர்கள் சுமார் இருபத்தி ஐந்திலிருந்து முப்பது விழுக்காட்டினர். இவர்களுக்கு திருமண உறவின் தேவை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அவர்கள் திருமணம் என்னும் அமைப்பில் கட்டாயமாக ஈடுபட வேண்டியிருக்கிறது.
ஒன்று நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது உங்கள் உடல் தேவைகளைக் கடந்து செல்ல வேண்டும். உங்கள் தேவை எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதை பொருத்து ஒரு தனிமனிதனாக நீங்களே இதை கவனித்து முடிவு செய்ய வேண்டும். சமூகம் உங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களில் இருந்து விடுபட்டு தெளிவாக இதைப் பாருங்கள்.
இதை முடிவு செய்வதற்கு நீங்கள் ஒரு மாதம் ஒதுக்கலாம். ஆனால் நீங்கள் இதைப் பற்றி முடிவு எடுக்கும்போது ஒரு தெளிவான நிலையில் இருக்க வேண்டியது மிக அவசியம். யாருடைய தாக்கமும் உங்கள் மேல் விழக்கூடாது. உங்கள் குருவினுடைய தாக்கமோ, சமூகத்தின் தாக்கமோ, வேறு யாருடைய தாக்கமோ உங்கள் மேல் இருக்கக்கூடாது.
தியானம் செய்து உங்களுக்குள்ளே ஒரு தெளிவான நிலைக்கு வந்தபின், உங்கள் தேவைகள் என்ன, அது எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதை நீங்கள் தெளிவுடன் பார்க்க வேண்டும். எனக்கு திருமணம் தேவையில்லை என்று நீங்கள் உணர்ந்தால், முடிவெடுத்த பின், அந்த பக்கமே திரும்பிப் பார்க்கக் கூடாது.
திருமணமா? திருமணம் இல்லையா? இரண்டில் ஒன்றை நீங்கள் தெளிவுடன் முடிவு செய்துக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த இரண்டுக்கும் நடுவில் ஊசலாடிக் கொண்டிருந்தால் நீங்கள் சதா சர்வகாலமும் குழப்பத்திலேயே இருப்பீர்கள். ஆனால் சத்குரு, “எது சிறந்தது சொல்லுங்கள்?” என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. சிறந்தது என்று எதுவும் இல்லை.
இந்த சமயம் நீங்கள் எதைச் செய்துக்கொண்டு இருக்கிறீர்களோ அதில் முழுமையாக கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கையை இதுபோல் வாழுங்கள். இந்தத் தன்மை உங்களுக்குள் இருந்தால், நீங்கள் எதைச் செய்தாலும் அது சிறப்பாக இருக்கும். ஆனால் சேற்றில் ஒரு கால், ஆற்றில் ஒரு கால் என்னும் மனப்பான்மையில் இருப்பதால்தான், திருமணம் ஆகி 15 வருடங்கள் கழித்தும் “ஒருவேளை நான் பிரம்மச்சரியப் பாதையில் சென்றிருக்க வேண்டுமோ?” என்று பலர் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். வேறு சிலரோ 10 வருட பிரம்மச்சரிய வாழ்விற்கு பிறகு, “ஓ! நான் திருமணத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டுமோ?” என்று குழம்பிப் போகிறார்கள்.
இது ஒரு தொடர் கதை. வாழ்க்கையை வீணாக்கும் பாழ் கதை.

No comments:

Post a Comment