Monday 27 April 2015

முருங்கையின் மகத்துவம் !!!
இன்று நாம் பேச இருப்பது முருங்கைக் கீரை.
முருங்கைக்கீரை என்று சொன்னால் இது மிகச் சாதாரணமாக வளர்க்கக்கூடிய ஒரு அற்புதமான கீரை. அதாவது கீரைகளின் ராணி என்று சொன்னால் அது இந்த முருங்கைக் கீரையைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த முருங்கைக்கீரை நிறைய நபர்களுக்கு ஒத்துவராது, சாப்பிடத்தோன்றாது, ருசியாகவும் இருக்காது என்று மிகப்பெரிய ஒரு புகார் பட்டியல் இந்த முருங்கைக்கீரை மீது உண்டு. ஏனென்றால் நாம் அப்படித்தான், மிக ருசியாக எதுவெல்லாம் எண்ணெயில் போட்டு பொறிக்க முடியுமோ, எதுவெல்லாம் எண்ணெயில் போட்டு வறுக்க முடியுமோ, எதுவெல்லாம் சாப்பிடுகிற பொழுது நாக்கிலிருந்து நீர் சொட்டுகிறதோ அதை மட்டுமே ரசிக்கக்கூடிய, அரவணைக்கக்கூடிய பக்குவமான மனசுக்கு சொந்தக்காரர்கள். ஆக சத்தான உணவுகளை புறந்தள்ளுவது என்பது நமக்கு கைவந்த கலை. அதே நிலையில் இருக்கிற பொழுதுதான் நமக்கு பல்வேறுபட்ட நோய்கள் வருகிறது என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக முருங்கைக்கீரையை நீங்கள் மறக்க மாட்டீர்கள்.
இந்த முருங்கைக்கீரையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தோம் என்றால் சுண்ணச்சத்து. நம் உடலுக்கு உரு கொடுக்கக்கூடியது எது என்றால் எலும்புகள், நரம்புகள், தசை. இந்த மூன்றையும் வலுப்படுத்தக்கூடிய தன்மை இந்த முருங்கைக்கு உண்டு. முருங்கைமரத்தில் இருக்கக்கூடிய முருங்கை வேரிலிருந்து அதாவது முருங்கை வேர், முருங்கைப் பட்டை, முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, முருங்கை விதை, முருங்கை பிசின், முருங்கை இலையை இணைக்கக்கூடிய ஈர்க்கு என்று சொல்லுவோம் அந்த குச்சு வரைக்கும் மருந்தாகக்கூடிய ஒரு அற்புதமான ஒரு மூலிகை எதுவென்றால் இந்த முருங்கை என்றுதான் சொல்லவேண்டும். பண்டைய சமூக மரபிலே இருக்கக்கூடிய வீடுகளிலே வீட்டுக்கு பின்புறமாக ஒரு முருங்கை மரம் இருக்கும். இந்த முருங்கை மரம் அழகுக்காக வைப்பதில்லை, முருங்கை மரத்தை உணவாகக் கொள்வதற்காக அவர்கள் வைத்தார்கள், வளர்த்தார்கள். இன்று முருங்கைக்கீரையைப் பார்த்தோம் என்றால் நாம் வெகுவாக மறந்துவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். சமீபத்தில் ஏற்பட்ட உணவியல் சார்ந்த விழிப்புணர்வு, என்னைப்போன்றவர்கள் நிறைய உணவியல் சார்ந்து எழுதி எழுதி இன்று மக்களிடையிலே மிகச்சிறந்த விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது.
சென்னையில் பார்த்தோம் என்றால் முருங்கைக்கீரைக்கு ஏகப்பட்ட தேவை. மக்கள் விரும்புகிற அளவுக்கு இன்று முருங்கைக்கீரை சென்னையில் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு முருங்கைக்கீரையைத் தேடக்கூடிய ஆரோக்கியமான ஒரு சந்தைக்கூட்டம் உருவாகியிருக்கிறது. மக்கள் தங்களுடைய உடல் நிலையைப் பற்றி அறிந்துகொள்ளக்கூடிய ஒரு பக்குவமான நிலைக்கு இன்று வந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் அடிப்படையில் சிறுதானியங்களான வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு இதுவெல்லாம் இன்று மக்களிடையே புழக்கத்தில் ஒரு சாதாரண நிலைக்கு வரக்கூடிய சூழலுக்கு வந்திருக்கிறது. முருங்கைக் கீரையை தேடிப்பெறுவதற்கும் நிறைய நபர்கள் இப்போது வந்திருக்கிறார்கள். ஆக இதையே சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முருங்கை மரம் வளர்த்து முருங்கைக்கீரையை வணிகமாகக் கொண்டு செல்லக்கூடிய ஒரு கூட்டமும் உருவாகியிருக்கிறது, அது நல்லது வரவேற்கக்கூடியதும் கூட. அப்படி இந்த முருங்கைக்கீரையில் என்ன சத்துக்கள் அதிகமாக இருக்கிறது என்றால் கால்சியம், சுண்ணாம்புச்சத்து. சுண்ணாம்புச்சத்து மிக அதிகமாக இருக்கக்கூடிய ஒரு மூலிகை எதுவென்றால் முருங்கைக்கீரைதான்.
நூறு கிராம் முருங்கைக்கீரையை நீங்கள் சமைத்து சாப்பிட்டீர்கள் என்றால் ஐநூறு மில்லிகிராம் அளவு கால்சியம் கிடைக்கும். அதாவது ஒன்று புரிந்துகொள்ளவேண்டும், எப்போதுமே இயற்கையாக இருக்கக்கூடிய உணவு மூலகங்களிலிருந்து பெறக்கூடிய சுண்ணச்சத்து என்பது நமது உடம்பை எந்த வகையிலும் பாதிக்காது, நமது உடம்பில் எங்கும் போய் சேர்மானம் ஆகாது அதாவது deposit ஆக சேராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செயற்கைத்தனமாக உருவாக்கப்பட்ட சுண்ணச்சத்து என்று சொல்லக்கூடிய கால்சியம் மாத்திரைகள் அதாவது நவீன மருந்துகள் அடிப்படையில் வரக்கூடிய கால்சியம் மாத்திரைகளை நீங்கள் மருந்தாகக் கொள்ளும் பொழுது அது பல்வேறு விதமான பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த நவீன மருந்துகள் கொடுக்கக்கூடிய கால்சிய மாத்திரைகள் அளவுக்கு மீறும் பொழுது அது உடம்பிலே சேர்மானம் ஆகாது அதாவது அது சில நேரங்களில் சிறுநீரகக் கற்கலாக உருவெடுக்கலாம். ஆனால் இயற்கை மூலகங்கள் என்று சொல்லப்படுகிற கீரைகளிலிருந்து கிடைக்கக்கூடிய சுண்ணச்சத்தானது நமது உடம்பில் சேர்மானம் ஆக சேராமல் சக்தியாக உடல்முழுவதும் நிரவும் என்பதை மனதில் நினைவில் கொள்ளுங்கள். ஆக நிறைய நபர்கள் கீரை சாப்பிட்டால் சிறுநீரகக்கற்கள் வரும் என்று தனக்குள்ளே ஒரு முறையை ஏற்படுத்திக்கொண்டு கீரையை வெறுக்கக்கூடிய ஒரு சூழலை இன்று ஒரு சில மருத்துவ முறைகள் ஏற்படுத்தி வருகின்றன என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது. கீரைகளில் சக்தியாக நிலவக்கூடிய சுண்ணச்சத்துகள் உடம்பிற்கு நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முருங்கைக்கீரை நல்லதா?, பால் நல்லதா?, பாலில் கால்சியம் அதிகமா?, முருங்கைக்கீரையில் கால்சியம் அதிகமா? என்று பார்க்கும் பொழுது முருங்கைக்கீரையில் மிக அதிக அளவில் கால்சியம் இருக்கிறது. அதாவது பாலை விட 17 பங்கு கால்சியம் என்னும் சுண்ணாம்புச்சத்தை தனக்குள் கொண்டிருக்கக்கூடியது முருங்கைக்கீரை. இந்த முருங்கைக்கீரையைத் தொடர்ந்து விடாமல் சாப்பிடுபவர்களுக்கு எலும்பு நல்ல வலுவாகும், எலும்புகளுக்கு உள்ளே இருக்கக்கூடிய மச்சை அதாவது platelet counts மிக அதிக அளவு உருவாகும். நமது உடம்பை மேம்படுத்தக்கூடிய சிவப்பணுக்களுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்தக்கூடிய தன்மை இந்த முருங்கைக்கீரைக்கு உண்டு. ஹீமோகுளோபின் அளவு நிறைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகக் குறைவாக இருக்கக்கூடிய ஒரு சூழலில் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இந்திய அளவில் பார்க்கிற பொழுது நிறைய நபர்கள் பாதிக்கப்பட்ட ஒரு நோய் எதுவென்றால் இரத்த சோகை (Anemic). ஏனென்றால் இந்தியா ஒரு வளரும் நாடு, வளரும் நாடுகளில் எப்பொழுதுமே பசி, பிணி, பட்டினி இவை மூன்றும் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கும். அதற்குக் காரணம் என்பது முறையான கல்வி, முறையான விழிப்புணர்வு இல்லாத நிலையைத்தான் நாம் சொல்ல முடியும். ஒரு நல்ல பொருளாதார வளமிக்க நாடு என்பது மக்களிடையே மிக அற்புதமான அளவில், ஏராளமான அளவில் ஆரோக்கிய கருத்துக்களைக் கொண்டு செல்ல இயலும், ஆனால் வளரும் நாடுகளில் கருத்துக்கள் கொண்டு செல்லப்பட்டாலும் அதை ஏற்கும் நிலையில் மக்கள் இல்லாத காரணத்தினால், சரியான விகிதாச்சார அடிப்படையில் சரிவிகித உணவு இல்லாத காரணத்தினால், பற்றாக்குறையினால் சமச்சீர் உணவு இல்லாத காரணத்தினால் பல்வேறுபட்ட நோய்களில் மக்கள் உழண்று கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்த முருங்கைக்கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கிறது, இதை அரசுகளே மக்களிடையே எடுத்துச் செல்லலாம். சாதாரணமாக பார்த்தோம் என்றால் ஊட்டச்சத்து சார்ந்த ஒரு துறை nutritional board என்று சொல்வோம். nutritional board என்பது இந்திய அரசு ஆளுகைக்கு உட்பட்ட ஒரு board. பல்வேறுபட்ட உணவுகளை வகுத்து பல்வேறுபட்ட உணவுகளில் இருக்கக்கூடிய சத்துக்களை பகுத்து ஆய்வு செய்து, மக்களிடையே கொண்டு செல்லக்கூடிய துறை nutritional board என்று சொல்லக்கூடிய துறை. அந்த உணவுத்துறையானது ஆய்வுசெய்கிறார்கள், ஆய்வுசெய்த விசயங்களை மக்களிடையே கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு நம்முடைய அமைப்பு முறைகள் இல்லாத காரணத்தினால் மிகவும் நோய்களுக்கு உட்படக்கூடிய ஒரு சூழல் நம்மிடையே இருக்கிறது. எனவே நல்ல ஒரு ஊட்டமான உணவு எது, ஒழுங்கான உணவு எது, முறையான உணவு எது என்பதை அரசையே நம்பி இருக்காமல், நாமே தனிப்பட்ட முறையில் சில ஆய்வுகளை செய்து அதை சரிசெய்துகொள்வதுதான் முறையாக இருக்கும்.
இன்றைய அளவில் கர்ப்பிணிகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கவேண்டும் என nutritional boardஎன்று சொல்லக்கூடிய உணவுத்துறை ஆய்வுகள் செய்கிறது. முதல் மாதம் என்ன உணவு தரவேண்டும், இரண்டாவது மாதம், மூன்றாவது மாதம் என்று முறையாக உணவுகள் கொடுக்கிறபொழுது அறுவை சிகிச்சை இன்றி அற்புதமாக குழந்தையைப் பெற இயலும் என்று அந்தத் துறை சொல்லுகிறது. ஆனால் நம்மிடையே அந்த விழிப்பு இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆக நம் உடம்பில் இருக்கக்கூடிய இரத்தப் பற்றாக்குறையிலிருந்து, எலும்புகள் வலுவிலிருந்து, எலும்புகளை மேம்படுத்துவதிலிருந்து, எலும்புகளுக்கு ஊடாக இருக்கக்கூடிய இரத்தத்தட்டுக்களை உற்பத்திபண்ணுவதிலிருந்து மிகச்சிறந்த பலனை தனக்குள் கொண்டது முருங்கைக்கீரை.
ஒரு சிலரைப் பார்த்தோம் என்றால் அதிகாலையில் எழுந்த உடனே பத்திலிருந்து நூறு தும்மல் தும்மக்கூடிய நபர்கள் நிறைய இருக்கிறார்கள். தும்மல் வந்தது என்றால், அது நேராக தும்மலின் அதிர்வானது இதயத்திற்குச் சென்று மறுபடியும் அங்கு இருக்கக்கூடிய சில நீர் திவளைகளை வெளியேற்றுவதற்காக இந்தத் தும்மல் வரும். அதே மாதிரி அந்த மாதிரி தொடர்ந்து தும்மல் வருகிற பொழுது சில நேரங்களில் அது இதயம் சார்ந்த பிணிகளை உருவாக்கும். இன்னும் அதீதமான தும்மல் வருகிற பொழுது மூக்கிலிருந்து இரத்தம் வரக்கூடிய சூழல் உண்டாகும். ஒரு சிலருக்கு அதிகமான தும்மலில் காதிலிருந்து இரத்தம் வருவதுண்டு. இன்னும் ஒரு சிலருக்கு இந்தத் தும்மல் கடுமையாகி தொண்டையிலிருந்து இரத்தம் வருவதும் உண்டு. அதனால்தான் இந்தத் தும்மல் வியாதியை இரத்தப் பீணிசம் என்று சொல்லுவோம். இந்த இரத்தப் பீணிசம், பீணிசம், நீர்கோர்வை (அதாவது (dropsy) தலையில் நீர் கோர்க்கக்கூடிய தன்மை) இதுவெல்லாம் வருகிறது என்றால் சரியான உணவு இந்த உடம்பிற்குத் தராத காரணத்தினால் வருகிறது என்பது முதலில் முழுமையாக நினைவில் கொள்ளுங்கள். ஆக சத்தான உணவு எது, தரமான உணவு எது, தேவையான சத்துக்களை தன்னுள் நிரப்பிய உணவு எது என்ற பட்டியலை நீங்கள் முழுவதுமாக தயார் செய்யவேண்டும். அப்படி நீங்கள் பட்டியல் செய்கிற பொழுது முருங்கைக்கீரைக்குத்தான் முதலிடம் கொடுக்கவேண்டும் என்பது எனது திடமான திண்ணமான எண்ணமும் கூட.
முருங்கைக்கீரையில் கால்சியம் மட்டும்தான் இருக்கிறதா என்றால் அல்ல, தேவையான அளவு இரும்புச் சத்தும் தனக்குள் உள்ள அற்புதமான மூலிகை இந்த முருங்கைக்கீரை. நான் சொன்னேன் இல்லையா ஹீமோகுளோபின் குறைவாக இருத்தல் (Anemic) இரத்த சோகையை முழுமையாக ஓட ஓட விரட்டக்கூடிய ஒரு மூலிகை எது என்றால் முருங்கைக்கீரைதான். ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை எடுத்து மூன்று மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாறெடுத்து பச்சையாக அந்த சாறை விடாமல் பத்துநாட்கள் சாப்பிட்டு வந்தோம் என்றால் கண்டிப்பாக இரத்த அளவு அதிகமாக ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். ஒரு நபருக்கு ஹீமோகுளோபின் என்று சொல்லக்கூடிய சிவப்பணுக்கள் குறைவாக இருக்கிற நேரத்தில்தான் அவரது உடம்பில் ஒவ்வாமை என்று சொல்லக்கூடிய அலர்ஜி மிகவும் அதிகமாகும். இந்த அலர்ஜிதான் sinusitis ஆக மாறும். ஆக ஒவ்வாமை கூறுகளை விரட்டுவதற்கு ஏற்ற ஒரு ஒப்பற்ற ஒரு மூலிகை எது என்றால் முருங்கைக்கீரை. இந்த முருங்கைக்கீரை என்பது உடம்பில் இருக்கக்கூடிய ஒவ்வாமையை முழுமையாக அகற்றக்கூடிய தன்மை உள்ளது.
காலையில் எழுந்து தும்மக்கூடிய தும்மலை முழுமையாக விரட்டக்கூடிய தன்மை இந்த முருங்கைக்கீரைக்கு உண்டு. இந்த முருங்கைக்கீரையை நீங்கள் சூப் மாதிரி கூட செய்து சாப்பிடலாம். மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, சிறிது உளுந்து சேர்த்து அரைத்த பொடியுடன் முருங்கைக்கீரையும் சேர்த்து நன்றாக அவித்து சாறு எடுத்து சாப்பிட்டோம் என்றால் கைகால் வலி, உடம்புவலி, மூட்டுவலி, கழுத்து வலி எல்லா நோய்களுக்கும் கேட்கக்கூடிய மிக அற்புதமான பொருள் எதுவென்றால் இந்த முருங்கைக்கீரையை நாம் சொல்லியே ஆகவேண்டும்.
இந்த முருங்கைக்கீரையை நீங்கள் வேறு ஒரு முறையிலும் பயன்படுத்தலாம். ஒரு சிலருக்கு இந்த முருங்கைக்கீரையை சாப்பிட்டால் வயிறு வலிக்கும், பேதியாகிறது என்று சொல்லக்கூடிய சில பக்கவிளைவுகள் உண்டு. அதற்கான காரணம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்தும், அளவுக்கு அதிகமான கால்சியமும் முருங்கைக்கீரையில் இருப்பதால் ஒரு சிலருக்கு இந்த முருங்கைக்கீரை செரியாமை என்பதைக் கொண்டுவந்து கழிச்சலை உண்டாக்கும். ஒரு சிலருக்கு வாந்தி வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. எனவேதான் எந்தக் கீரையாக இருந்தாலும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், எல்லா கீரைகளையுமே பார்க்கும் பொழுது மந்தமான தன்மை உடையது, எளிதில் கீரை செரிமானமாகாது, ஆனால் மிக எளிய உணவு. ஒரு நபர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொன்னால் மிக எளிமையாக கீரையை வைத்து குறைக்க முடியும். காலையில் முருங்கைக்கீரையை மட்டுமே கடைந்து சாப்பிடுவது அல்லது வெறும் முருங்கைக்கீரையை சூப் மாதிரி செய்து வைத்துக்கொண்டு வேறு ஏதாவது பப்பாளிப்பழம் அல்லது கொள்ளை அவித்து சிறிதளவு அதாவது காலையில் முருங்கைக்கீரை சூப்பும் கொள்ளு சிறிதளவும் அல்லது முருங்கைக்கீரை சூப்பும் பப்பாளியும் மாலையில் மறுபடியும் முருங்கைக்கீரையை சூப் இரவு நேரத்தில் ஒரு சிற்றுண்டி என்று இந்த மாதிரி ஒரு உணவுப்பழக்கத்தைத், தொடர்ந்து ஒரு மாதம் இரண்டு மாதம் பழக்கப்படுத்துகிற பொழுது கண்டிப்பாக உடல் எடை குறையும். ஏனென்றால் குறைவான கலோரி உள்ளது.
நூறு கிராம் முருங்கைக்கீரையை எடுத்தீர்கள் என்றால் கண்டிப்பாக அதில் இருக்கக்கூடிய கலோரியின் அளவைப் பார்த்தோம் என்றால் கிட்டத்தட்ட 60 கலோரி இருக்கும். ஆனால் நாம் சாப்பிடக்கூடிய ஒரு இட்லிக்கு 60 கலோரி உண்டு. நாம் சாதாரணமாக 6 இட்லி சாப்பிட்டோம் என்றால் மொத்தமாக 360 கலோரி வரும். அதற்கு நான்கு வகையான சட்னி சேர்ப்போம் அதிலிருந்து ஒரு கலோரி கிடைக்கும், அடுத்து அந்த சட்னியில் சேர்க்கப்பட்ட எண்ணெயின் தரத்திற்கு தகுந்தவாறு எண்ணெயில் ஒரு கலோரி இருக்கும். இம்மாதிரி இருப்பதனால் அது உடலுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாக கருத இயலாது. ஏனென்றால் இட்லியில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை, எண்ணெயில் இருக்கக்கூடிய கொழுப்புத்தன்மை, பிறகு சட்னியில் சேர்க்கப்பட்ட காரத்தன்மை, மாவின் புளிப்புத்தன்மை இப்படி எல்லாமே சேருகிறது. நான்கு இட்லி சாப்பிட்டால்கூட கீழே இருக்கக்கூடிய வயிறு நெஞ்சுக்கு வரக்கூடிய சூழலை நாம் அனுபவிக்கிறோம்.
ஒரு சில உணவுகளை எடுக்கிற பொழுது நிறைய தண்ணீர் தாகம் எடுக்கிறது என்றால் உணவு சரியில்லை என்று அர்த்தம். தோசை எடுக்கிறோம், தோசையை சாப்பிட்டு முடித்த பிறகு அரைலிட்டர் அல்லது ஒரு லிட்டர் தண்ணீர் குடித்தால்தான் சமமாகிறது என்றால் அந்த உணவு அவ்வளவு புளிப்பானது, உடம்பிற்குக் கேடானது என்று அர்த்தம். எந்த ஒரு உணவையும் சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்துதல் கூடாது என்றே சொல்வார்கள், உணவை சாப்பிடுவதற்கு முன்புதான் தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு உணவை சாப்பிடுகிற பொழுது தண்ணீர் தேவைப்பட்டால் அந்த உணவு அந்த உடம்புக்கு சரியல்ல என்று அர்த்தம். ஆக முருங்கைக்கீரை சூப் சாப்பிட்டுப் பாருங்கள், முருங்கைக்கீரை சாறு சாப்பிட்டுப் பாருங்கள் அப்பொழுது அந்த தாக உணர்வு இருக்காது.
இப்பொழுது முருங்கைக்கீரை கஞ்சி, இந்த முருங்கைக்கீரையை கஞ்சி மாவுமாதிரி நாம் செய்யப்போகிறோம் என்பதைப் பற்றி நாம் பேசுவோம். பழைய தமிழ் மரபுகளில் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக செய்த உணவு. எங்கள் கிராமத்தில் பண்ணக்கூடிய ஒரு சின்ன விசயம் ஆடிக்காற்றில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய முருங்கை மரங்கள் எல்லாம் உடைந்து கீழே விழுந்துவிடும். அப்படி விழுந்த அந்த முருங்கைமரத்தில் இருக்கக்கூடிய இலையை கடைந்து சாப்பிடுவது, சூப் செய்து சாப்பிடுவது முடியாத ஒரு காரியமாக மாறிப்போகும்.
அந்த மாதிரி நேரங்களில் என்ன செய்வார்கள் என்றால் இலையை எல்லாம் எடுத்து அரைத்து சாறாக்கி, அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது என்றால் அதில் ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து, அதில் ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து, கூடவே இருநூறு கிராம் சிறுபருப்பு சேர்த்து, சிறிது சுக்கு ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்கவேண்டும். காயவைத்தோம் என்றால் அரிசி உணவுப்பொருட்கள் எல்லாமே அந்த சாறை இழுத்துவிடும். அதனை மறுபடியும் காயவைத்து ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். குருணை அரிசிமாதிரி பொடித்துவைத்துக்கொண்டு கஞ்சியாக செய்துகொள்ளலாம். இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம் அல்லது காலையில் மட்டும் சாப்பிட்டுக்கொண்டு வரலாம். இந்த மாதிரி கஞ்சி சாப்பிடுவதால் என்ன நன்மை என்று பார்க்கிறபொழுது முதுகெலும்பை வலுப்படுத்தக்கூடிய தன்மை இந்த கஞ்சிக்கு உண்டு.
இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது. அதே மாதிரி தொடர்ந்து பயணப்படக்கூடியவர்கள், இருசக்கர வாகனங்களில் போய் வரக்கூடியவர்களுக்கும் L4, L5 தேய்ந்து போகிறது. அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ஒரு அரைமணிநேரத்தில் உட்கார்ந்த நிலையில் இயலாத ஒரு சூழல் உண்டாகும். அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது, L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய disc prolapse ஆவது இவையனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து எதுவென்றால் முருங்கைக்கீரைதான் என்று சொல்லவேண்டும். முருங்கைக்கீரைக் கஞ்சியை செய்துவைத்துக்கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும். இவ்வாறு சாப்பிட்டுக்கொண்டே வந்தால் உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும். என்னுடைய மருத்துவ அனுபவத்தில் பல்வேறுபட்ட அனுபவங்களை நான் பார்த்திருக்கிறேன். அதாவது கரு உண்டாகி அறுவைச்சிகிச்சை அடிப்படையில் குழந்தை பெற்ற நிறைய பெண்களுக்கு, ஒரு பத்து நிமிடம் கூட உட்காரமுடியாமல் இருந்த பெண்களுக்கு வெறும் முருங்கைக்கீரை கஞ்சியவே இரண்டு மாதம், மூன்று மாதம் கொடுத்து நான் முழுமையாகக் குணப்படுத்தியிருக்கிறேன் என்ற ஒரு அற்புதமான அறிய தகவலை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆக முருங்கைக்கீரையை விடாமல் தொடர்ந்து சாப்பிடக்கூடிய ஒரு பழக்கவழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டீர்கள் என்றால் மிகவும் அற்புதமாக இருக்கும்.
இதற்கு மட்டும்தான் இந்த முருங்கைக்கீரையா என்றால், ஆண்மையைக்கூட அதிக அளவு வலுப்படுத்தக்கூடிய தன்மை உண்டு. இன்றைக்கும் நீங்கள் தேனி, போடிநாயக்கனூர், சிவகாசி, சாத்தூர் போன்ற இடங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திலேயே இருக்கக்கூடிய ஒரு அற்புதமான வழக்கம், மிக எளிமையான மருந்தும் கூட. ஒரு ஐம்பது கிராம் எள்ளு புண்ணாக்கு, ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை, ஐந்து வெற்றிலை, ஒரே ஒரு துண்டு சாதிக்காய் இவற்றை ஒன்றிரண்டாக உரலில் போட்டு இடித்து அதை அப்படியே கசாயம் செய்து அவித்து அதை ஒரு டம்ளர் தினசரி சாப்பிட்டுக்கொண்டே வருவார்கள். யாரென்றால் ஒரு ஐம்பது அறுபது வயதைக் கடந்த ஆண்கள் சாப்பிட்டுக்கொண்டு வருவார்கள். அவர்களுடைய ஆண்மை நரம்புகள் தூண்டப்பட்டு ஒரு அபாரமான ஆண்மை சக்தி உண்டாகி ஒரு நீண்ட நேர போகத்திற்கு உரிய ஒரு அற்புதமான உடல்வாகை தரக்கூடிய இந்த கூட்டுக்கலவை மருந்துக்கு உண்டு. இதை ஏன் நீங்கள் முயற்சி செய்யக்கூடாது. ஆக இந்த முருங்கைக்கீரையில் இவ்வளவு அற்புதமான பலன்கள் உண்டு.
இன்னும் சொல்லப்போனால் அந்த முருங்கை மரத்தின் வேருக்கு இன்னும் கூடுதல் பலன் என்று சொல்லலாம். ஒரு சிலருக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, நாக்குப்பூச்சி என்று நிறைய பூச்சிகளுடன் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த வயிற்றுப் பூச்சிகளை முழுமையாக சரிசெய்யக்கூடிய தன்மை இந்த முருங்கை வேருக்கு உண்டு. இந்த முருங்கை வேரை ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் சீரகம், சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட்டோம் என்றால், நான் சொன்ன எல்லா பிரச்சனைகளும் சரியாகும். பூச்சி புழுக்கள் இருந்தாலே ஒரு சிலருக்கு உடல் தேராது, மனக்குழப்பத்தில் இருப்பார்கள், மன அழுத்தத்தில் இருப்பார்கள், வீட்டில் உள்ள எல்லோரையும் ஒரு வழிசெய்துகொண்டிருப்பார்கள். ஒரு சிலர் இதனை மனநோய் என்று நினைத்துக்கொண்டிருப்போம், ஆனால் அது மனநோயாக இருக்காது. உள்ளே இருக்கக்கூடிய பூச்சியினால் இருக்கக்கூடிய பிரதிபலிப்பாகக்கூட இருக்கும். அந்த மாதிரி இருக்கிறது என்றால் முருங்கை வேரை எடுக்கிற பொழுது நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சில நேரங்களில் மனம் சார்ந்த நோய்களுக்கும் முருங்கை வேரை நமது பண்டைய சித்தர்கள் மருந்தாக பயன்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவு அற்புதமான பலனைக் கொடுக்கிறது இந்த முருங்கை.
ஒரு சிலர் உடல்வாகு மிகவும் ஒல்லியாக இருப்பார்கள், பற்கள் தெளிவில்லாமல் இரத்தம் வந்துகொண்டே இருக்கும், அதே போல் ஆண்மை சக்தி குறைவாக இருக்கும், குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்கும் என்றால் முருங்கை பூவை தினசரி ஒரு கைப்பிடியளவு எடுத்து பாலில் சேர்த்து வேகவைத்து அதை வடிகட்டி அதில், இரண்டே இரண்டு இதழ் குங்குமப்பூவை சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தீர்கள் என்றால் ஆண்மை சக்தி பெருகும், உயிரணுக்கள் அபாரமாக பெருகும். அந்த அளவிற்கு இந்த முருங்கைப்பூவுக்கு அற்புதமான குணம் உண்டு. முருங்கைப்பூவை துவையல் மாதிரியே வீட்டில் அரைக்கலாம். எனக்குப்பிடித்த துவையல்களிலேயே முருங்கைப்பூ துவையல் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கெல்லாம் முருங்கைப்பூ கிடைக்கிறதோ அதை எடுத்து வந்து சாப்பிடக்கூடிய ஒரு இயல்பு உண்டு. சமீபத்தில் எனது வாடிக்கையாளர் ஒருவர் திருவண்ணாமலையிலிருந்து முருங்கைப்பூவை வேறுஒருவர் மூலம் கொடுத்துவிடக்கூடிய அளவிற்கு நான் அதன் மேல் ஒரு காதலோடு இருப்பேன் என்று சொல்லலாம்.
முருங்கைப்பூ, வெள்ளரி விதை, பூசணி விதை, காய்ந்த மிளகாய், சிறிது கசகசா இவையனைத்தையும் சேர்த்து அரைத்து துவையலாக வைத்து சாப்பிடலாம். முருங்கைப்பூ துவையல், முருங்கைப்பூ சட்னி இவையனைத்தையும் செய்யலாம். நான் ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் உடலை மேம்படுத்தக்கூடிய உடலில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய இந்த உணவுகள் மறுபடியும் நமது சமூகத்தில் வளம் வரவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் நான் இதை சொல்லுகிறேன். நமது உணவுப் பழக்கவழக்கங்கள் மாறவேண்டும். ஏனென்றால் ஒரு அறிஞன் சொல்லுகிறான் “ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவன் வழிவழியாக பயன்படுத்தக்கூடிய உணவை அழித்தால் போதும்”, உணவு முறையை அழித்தால் போதும் ஏனென்றால் உணவுமுறைகளிலிருந்துதான் ஒரு மரபு கூறு என்று ஒன்று உற்பத்தியாகிறது. ஆக நமது உணவில் நாம் கவனம் செலுத்தவில்லை என்றால் கண்டிப்பாக நிறைய பிரச்சனைகள் வரும் என்பதை மனதில் கொள்ளுங்கள் எனது அன்பான சிறகு இணையதள நேயர்களே.
முருங்கையில் எண்ணற்ற பலன்கள் உள்ளது. என்னால் மணிக்கணக்கில் பேச இயலும், தொடர்ந்து புத்தகமே எழுத முடியும், முருங்கைக்கீரைக்கு என்னால் 300 பக்கத்திற்கு ஒரு புத்தகமே எழுத இயலும் அந்த அளவிற்கு மிக அற்புதமான பலன்களை தனக்குள் கொண்ட அற்புதமான ஒரு பொக்கிசம் என்றால் அது முருங்கைக்கீரையைத்தான் நாம் சொல்லவேண்டும்.
முருங்கை பிசினை உலகத்தில் தெரியாதவர்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். உடலை வலுப்படுத்த, உடலை இறுக்க, உடலை நல்ல ஒரு கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இந்த முருங்கை பிசின் மிகவும் நல்லது. இந்த முருங்கை பிசின் என்றால் என்ன? இந்த பிசின் என்பது மரத்திலிருந்து வெளித்தள்ளக்கூடிய கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. அதாவது முருங்கைமரத்தில் இருக்கக்கூடிய அதீதமான கால்சியம், சுண்ணச்சத்து, நார்ச்சத்து இவையனைத்தும் பிசினாக உருவெடுத்து அந்த மரத்திலிருந்து வெளிதள்ளும். மனிதனுக்குக்கூட பிசின் வெளிதள்ளும் உங்களுக்குத் தெரியுமா? எப்படி என்றால், கண்களில் பீழை சாடும். எந்த ஒரு மனிதனுக்கு கண்களில் பீழை சாடுகிறதோ அவனுக்கு தேவையான அளவு சுண்ணச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து இல்லை என்று அர்த்தம். தூங்கி எழுந்த பொழுது கண்களில் இறுதிப்பகுதியிலே பீழை சாறும், வெண்மை நிறத்தில் இருக்கும். ஒரு சிலருக்கு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வெள்ளை வெள்ளையாக பீழையை எடுத்துக்கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி இருந்தது என்றால் இந்த மூன்று சத்துக்களும் மிகக்குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். மிகக்குறைவாக இருக்கக்கூடிய அந்தப் பிரச்சனையை நீங்கள் சரிசெய்ய வேண்டும் என்றால் முருங்கை மரத்திலிருந்து வெளித்தள்ளக்கூடிய அந்த பிசினை மருந்தாக மாற்றி சாப்பிட வேண்டும்.
முருங்கை பிசினை ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுத்து தூள் செய்வது மிக எளிது. இந்தத் தூள் செய்த பொடியை இரவுநேரத்தில் கொதிக்கின்ற நீரில் போட்டு அப்படியே வைத்திருந்து அதிகாலையில் வடித்து சாப்பிட்டீர்கள் என்றால் மிக அற்புதமான பலன் கிடைக்கும். நாம் உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று உடலைத் தேற்றக்கூடிய ஒரு சூழல் உண்டு. இது எதுவுமே செய்யத்தேவையில்லை அதிகாலை ஒருமணிநேரம் நடைப்பயிற்சி செய்து இந்த முருங்கை பிசினை ஊறவைத்து அப்படியே சாப்பிட்டுவிட்டு, பழஉணவை காலை உணவாக சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் ஒரு அற்புதமான உடற்கட்டு, உடற்வாகு கிடைக்கும் என்பதை உங்கள் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
இது மட்டுமா முருங்கை விதை, சந்ததி இல்லாத அனைவருக்குமே சந்ததி தரக்கூடிய அற்புதமான விதை. ஆண்களுக்கான உயிரணுக்களை அதிகப்படுத்தக்கூடிய விதை. முருங்கை விதையை பொடிசெய்து வைத்துக்கொண்டு காலை இரவு என்று சாப்பிடலாம். அல்லது நெரிஞ்சி முள், கோரைக்கிழங்கு, முருங்கை விதை, நீர் முள்ளி விதை இந்த நான்கையும் சமஅளவு எடுத்து பொடிசெய்து கொண்டு இதை காலை இரவு என்று இரண்டு வேளையும் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு வரும் பொழுது ஒரு இனிமையான தாம்பத்தியத்தோடு மனைவி மெச்சிய மனாளனாக வாழக்கூடிய ஒரு சூழலுடன் ஆயுள் முழுக்க வாழ இயலும். ஆகவே கீரைகளின் ராணியாம் முருங்கையைத் தொடர்ந்து நாடுங்கள், உங்களுக்கு தலை முதல் பாதம் வரை எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரிசெய்யக்கூடிய ஒரே ஒரு மூலிகை முருங்கை. அந்த முருங்கையை இருகை தூக்கி வழிபடுங்கள், அதை உணவாக பாவியுங்கள், தொடர்ந்து நூறாண்டு வாழுங்கள். வாழ்க நலமுடன் வளமுடன்.
மேலும் தொடர்புக்கு:
சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94 வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667
இணைய தளம்

No comments:

Post a Comment