Tuesday 24 February 2015

குழந்தையை தொடர்ந்து அழ விடாதீர்கள்!
குழந்தைகள் தொடர்ந்து அழுவதால், அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நேரம் குழந்தை அழும்போது பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன் குறைந்து போவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகள் அழுவது, பசியை தாய்க்கு உணர்த்தவே என்பது எல்லோரும் அறிந்தது. உடலில் உள்ள வலியையும், தனக்கு ஏற்படும் பிரச்னைகளையும், தாய்க்கு உணர்த்த குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே வழி அழுகை மட்டும்தான். குழந்தைகள் நீண்ட நேரம் அழும்போது, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டி÷சால் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது. இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக, மனநலம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இருபது நிமிடங்கள் வரை, குழந்தைகள் அழ அனுமதிக்கலாம். ஆனால் அதற்கு மேலும் யாருடைய கவனிப்பும் இன்றி, அழுது ஓய்ந்து போகும் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நடவடிக்கைகள், மற்ற குழந்தைகளிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். இதனால், அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்குவதில்லை. ஆளுமைத்திறன் குறைந்து, மந்தத்தன்மையோடு காணப்படுவார்கள் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். அழும் நேரத்தில் குழந்தைகளை அரவணைப்பதோடு, அதற்கான காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும்.
இரவு நேரத்தில் தொட்டிலில் உறங்கும் குழந்தைகள், அழும்போது பசிக்கு அழுவதாக நினைக்கும் தாய்மார்கள், அவசரமாக பாலை புகட்டி உறங்க வைக்கின்றனர். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு, சத்தமில்லாமல்
மரணமடைகின்றன. குறிப்பாக, ஆண் குழந்தைகள்
மத்தியில், தொடர் அழுகையால் சத்தமில்லாத மரணம் அதிகளவில் ஏற்படுகிறது. இதுபோன்ற தொட்டில்
மரணங்கள், குளிர்காலத்தில்தான் ஏற்படுகின்றன.
எடைகுறைவான, ப்ரீமெச்சூர் குழந்தைகளுக்கே இந்த ஆபத்து அதிகம். குழந்தைகளை குப்புறப் படுக்க வைக்கும்போது, குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது. கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டக் கூடாது. பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும், ஏப்பம் எடுத்து விட்ட பிறகே குழந்தையை படுக்கையில் கிடத்த வேண்டும்.
நம் நாட்டில் பெரும்பாலும், தாய்மார்களின் அணைப்பிலேயே குழந்தையை (மல்லாக்க) படுக்க வைத்து மென்மையாகத் தட்டிக் கொடுத்து தூங்க வைப்பதால், அந்த ஸ்பரிசமும், அணைப்பும் கிடைத்த நிம்மதியில் குழந்தை பெரும்பாலும் அப்படியே தூங்கி விடுகிறது. தாயின் அணைப்பும் ஆதரவும், குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தருவதால் நிம்மதியாக உறங்குகிறது

No comments:

Post a Comment