Tuesday 5 April 2016

சட்டை முனி ஞானம்
முன் ஞானம்
அகண்டபரி பூரணமாம் உமையாள் பாதம்
அப்புறத்தே நின்றதோர் ஐயர் பாதம்
புகன்றுநின்ற கணேசனொடு நாதாள் பாதம்
புகழ்பெரிய வாக்குடைய வாணி பாதம்
நிகன்றெனவே யெனையாண்ட குருவின் பாதம்
நிறைநிறையாய்ச் சொரூபத்தில் நின்றோர் பாதம்
முகன்றெனையீன் றெடுத்தசின் மயத்தின் பாதம்
மூவுலகு மெச்சுதற்குக் காப்புத் தானே.
தாங்கிநின்ற சரியையிலே நின்றுசடம் வீழில்
தப்பாது கிரியையுள்ளே சாரப் பண்ணும்
வாங்கிநின்ற கிரியைவிட்டு விழுந்த தானால்
மகத்தான வுடலெடுத்து யோகம் பண்ணும்
ஓங்கிநின்ற கிரியைவிட்டு விழுந்த தானால்
உத்தமனே! உயர்ந்துநின்ற ஞானந் தோற்றும்
பாங்கில்நின்ற அச்சென்மம் மவுன முத்தி
பரிவாக வாய்ந்தவர்கள் அறிந்து கொள்ளே.
அறிந்திருந்த நான்குக்கும் விக்கின முண்டாம்
அப்பனே! ஆகாயமியஞ் சித்தி னோடே
மறிந்துநின்ற பிராரத்தந் தோயத் தோடு
மகத்தான நாலுக்கும் விக்கின மாச்சு;
பிரிந்துநின்ற நாலினாற் செய்வதென்ன?
பேரான வறுமையொடு கிலேசந் துக்கஞ்
செறிந்துநின்ற பெண்பொன்னால் மண்ணினாலே
சேத்துமத்தி லீப்போலத் தியங்கு வாரே.
தியங்கினால் கெர்ச்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சகத்தி னுள்ளே
மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ?
தயங்கினா ருலகத்திற் கோடி பேர்கள்;
சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு;
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு;
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப்பாழே.
பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ?
பரந்தமனஞ் செவ்வையாய் வருவதெப்போ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ? மனமே ஐயோ!
காழான வுலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவது மேதென்றால் மூலம் பாரே.
மூலமதி லாறுதலங் கீழே தள்ளி
முதிர்ந்துநின்ற மேலாறு மெடுத்து நோக்கிக்
கோலமுட னுன்மனையைத் தாண்டி யேறிக்
கொடியதொரு ஞானசக்திக் குள்ளே மைந்தா!
பாலமென்ற கேசரியாம் மவுனத் தூன்றிப்
பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றிக்
காலமொடு பிறப்பிறப்புங் கடந்து போகுங்
கைவிட்ட சூத்திரம்போல் சடமு மோங்கே.
ஓங்கார முதற்கொண்டைந் தெழுத்தோ டாறும்
உற்றுநின்ற பஞ்சகர்த்தா ளிருந்தி டாறும்
ஆங்கார மாணவம்நா னெனலும் போனால்
அப்பவலோ அகாரமுத லுகாரங் காணும்
பாங்கான மகாரமொடு விந்துநாதம்
பரவியதன் மேல்நிற்கும் பராப ரந்தான்
வாங்கான மவுனத்தைப் பற்றி யேறு
மருவிநின்ற லகிரியைத்தா னொத்துக் காணே.
ஒத்துநின்ற ஓங்காரம் மண்ணை யுண்ணும்
உருவியந்த மண்சென்று சலத்தை யுண்ணும்
பத்திநின்ற சலமதுதான் தீயை யுண்ணும்;
பாங்கான தீச்சென்று காலை யுண்ணும்;
வெத்திநின்ற கால்சென்று விண்ணை யுண்ணும்;
விழுந்ததப்பா சடமென வேதாந்தப் பேச்சு;
முத்திகண்டு கூடுவது மெந்தக் காலம்?
மூடரே மதுவையுண்டு மேல்பா ரீரே.
பாரப்பா அகாரமுத லுகாரங் கொள்ளும்;
பாங்கான உகாரமது மகாரம் கொள்ளும்;
நேரப்பா மகாரமது விந்து கொள்ளும்;
நேரான விந்துவது நாதம் கொள்ளும்;
சேரப்பா நாதமுற்றுச் சத்தி கொள்ளும்;
சேர்ந்துநின்ற சத்தியல்லோ சிவத்தைக் கொள்ளும்;
ஆரப்பா சிவந்தன்னைப் பரந்தான் கொள்ளும்;
அப்பரத்தைக் கொண்டவிடம் அறிந்தே யுன்னே.
உன்னிநின்ற மூலமுத லாறும் பார்த்தே
உருகிநின்ற சுழுமுனையை யறிந்த பின்பு
மன்னிநின்ற மதிமேல்சாம் பவியைக் கண்டு
மருவிநின்று மனமுறைந்து தேர்ந்த பின்பு,
பன்னிநின்ற இவ்வளவும் யோக மார்க்கம்;
பகலிரவு மற்றவிடம் ஞான மார்க்கம்;
கன்னிநின்ற விடங்கண்டா லவனே ஞானி
காட்டுவான் கேசரியைக் காட்டு வானே.
காட்டுவான் கிரியுன்னை மேலே யேற்றிக்
கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்வாள்
மூட்டுவாள் குளிகைவிட்டால் கணத்துக் குள்ளே
மூதண்ட புவிகடந்து தெளிவுங் காணும்
ஆட்டுவா ளண்டரண்ட மாலை பூண்டாள்
ஆதிவத்து அனாதிவத்து இரண்டு மொன்றே
ஊட்டுவாள் நிர்க்குணத்தி னமிர்தவல்லி
உயர்ந்துநின்ற ஞானசத்தி யுறவு தானே.
உறவென்னத் தாறைவிட வுறவு முண்டோ?
உலுத்தரையோ வாமத்தைத் தூடிப் பார்கள்
குறைவென்ன திரோதாயி சமயந் தோறுங்
கூடியல்லோ மாயவலை கூட்டி யாட்டி
மறவென்ன ஞானமென்ன மங்கித் தள்ளி
மகத்தான சமுசார வலையிற் போட்டாள்
நிறவென்ன வாமத்தால் ஞான மாச்சு
நின்றவனே சிவயோகி வாசி பாரே.
வாசியென்றும் மவுனமென்றும் இரண்டும் வித்தை
மகத்தான சாம்பவிகே சரியும் ரண்டு
தேசி யென்றால் யோகத்துக் காதி வித்தை
திறமான மவுனமென்றால் ஞான வித்தை
மாசியென்ற மனமுடைத்தா லிரண்டு மாகா;
மருவுநின்றே அறிவறிந்தா லிரண்டு மாகும்;
தூசியென்ற வெளியல்லோ அண்ட வீதி
சொக்காமல் கிரிகொண்டே ஆக்கி யேறே.
ஆக்கிநின்ற பரிசத்தால் கொசுவி றந்த
தாச்சரியம் ரூபத்தில் வண்டி றந்த
பாக்கிநின்ற மணியொலியால் மானி றந்த
பாழான வுரிசையினால் மீனி றந்த
தாக்கிநின்ற கெந்தியினா லெறும்பு சென்று
சாதகமாய் மாண்டதிந்த ஐந்தும் பாரு;
பாக்கிநின்ற இந்திரிய விடயத் துள்ளே
பாழான மனஞ்சிக்கிப் படுகு வாரே.
வாரான வுலகத்தில் மனிதர் கோடி
மருவிநின்றே யுண்டுடுத்துச் சையோ கித்துத்
தாரான கசதுரக ரதங்க ளேறிச்
சகலரத்ன பூடணங்கள் தரித்து விம்மி
மாரான வாழ்வடைந்தோர் இறந்தா ரையா!
மாண்டவர்கள் வெகுகோடி மாய வாழ்க்கை
கூரான சிவபோக ஞானம் வந்தால்
கூடழிந்து போகாது கூடு கூடே.
கூடுவதம் பரமோகே சரமோ வென்னில்
கூர்மையுள்ள வானோவ தீதமோ வென்னில்
ஆடுவதாச் சரியநின் மலமோ வென்னில்
அருமையுள்ள நிர்க்குணமோ நிரஞ்சனமோ என்னில்
பாடுவது பதங்கடந்த பூரணமோ வென்னில்
பகலிரவு மற்றிடமோ பராபரமோ வென்னில்
ஊடுவதெங் கேபின்னை யெங்கு மில்லை
உம்மென்றா லூமவெள்ள மோகங் காணே.
மோகமென்ற வுரலுக்குள் மனந்தான் சிக்கி
முசியாம லிடிப்பதற்கைம் பொறியுங் கோல்தான்
பாகமென்ற கோபம் வந்தே யுருவாய் நின்று
பதையாமற் சண்ணிச்சே யுலக மெல்லாந்
தாகமென்ற ஞானம்வந் தென்ன செய்யும்?
சண்டாள இந்திரியச் சார்பி னாலே
வேகமென்ற மனலகரி யைத்தான் கொண்டு
விண்ணுக்கு ளேநிற்க வெளியாய்ப் போமே.
வெளியேது வெளிக்குள்ளே வெளியங் கேது?
வேதாந்த வெளிகடந்த வொளியங் கேது?
அளியேதவ் வளிகடந்த அண்ட மேது?
அப்புறத்தே தோற்றுகின்ற சோதி யேது?
நெளியேது நினைவேதுநிர்க் குணந்தா னேது?
நேரான பூரணத்தின் நாத மேது?
சுழியேது? சுழியடக்குஞ் சூட்ச மேது?
தோற்றுமப்பா வானத்தை யொத்துப் பாரே.
ஒத்துநின்ற சரியையொடு கிரியை ரண்டும்
உறவாதி செய்தவப்பா நன்றாய்க் கேளு;
பத்திநின்ற யோகமுதல் ஞானம் ரண்டும்
பாங்காகச் சித்தருக்கே அடுத்தவாறே
அந்திநின்ற ஆகாம்யசஞ் சிதபிரா ரத்வம்
ஆருக்கு மடுக்குமென்றால் யோக மெய்தி
முத்திநின்ற ஞானத்திற் புகுந்தோர்க் கையா
மூன்றுமிலை பிரபஞ்ச முழுதும் போச்சே.
போச்சென்பர் முக்காலம் பிறகே நின்று
புரிமுருக்குப் போலேறிப் புணர்ந்து கொல்லும்
ஆச்சப்பா காலமென்ன வென்று சொல்லி
அவரவர்கள் சபஞ்செய்வா ரறிந்த மட்டும்;
நீச்சப்பா அகாலவெள்ளம் கடப்பா ரென்றால்
நேரான ஞானியல்லோ கடந்து நின்றார்
மூச்சப்பா அற்றிடத்தைப் பாரு பாரு
மூட்டுவிக்கு முகிடந்தான் ஞானத் தீயே.
தீக்குள்ளே வெந்துநின்ற பற்பம் போலச்
செகசால முதற்கொண்டு காலம் போகும்;
தீக்குள்ளே விழுந்தெழுந்த நெய்யைப் போலச்
சிறப்பான ஞானமது திரண்டே யேறும்;
தீக்குள்ளே காட்டமொடு கோலுங் கூடித்
திரண்டாற்போற் கருவியெல்லாம் கணத்தில் மாளும்;
தீக்குள்ளே பராபரந்தா னிருந்த தாயின்
செகமெல்லாம் வித்தையென்று தெளிந்து போமே.
தெளிந்தவிடங் கண்டாரார் சித்தர் யோகி
செகமெல்லாம் நரனென்பார் திருட்டுஞானம்
ஒளிந்துவிட முனைந்ததால்கே சரிக்குள் நிற்பாள்
உற்றுப்பார் மகாரம்வைத்தே யூகி யூதே
அளிந்தவிடம் நிர்க்குணந்தா னதிலே கேளு;
ஆச்சரிய மகாரமென்ற யுண்ட துண்டு;
களிந்தவிடம் நிராகார மொன்று மில்லைக்
காட்டுந்தா ரறிவுகொண்டே யுற்றுக் காணே.
உற்றுநின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே
ஊணுக்குக் கிடையாமல் புரட்டுப் பேசிப்
பற்றுகின்ற மோகத்தாற் பெண்ணைக் கூடிப்
பரந்துநின்ற திரோதாயி தலையிற் சிக்கிக்
கொத்துகின்ற விடங்காண்பார் கண்ணை மூடிக்
கும்மென்றே யிருளாகு மறிவும் பொய்யாம்
மற்றுநின்ற லகரியினால் கொண்டே யேற
மாட்டார்கள் அறுசமய மாடு தானே.
சமயமெல்லாஞ் சக்தியுண்டு சிவமு முண்டு;
சண்டாளர் பிரித்தல்லோ தள்ளி னார்கள்;
சமயமெல்லாம் வேதாந்தசித் தாந்த முண்டு
சாதகத்தைப் பாராமற் றயங்கி னார்கள்;
சமயமெல்லாம் நாதமுண்டு விந்து முண்டு;
காக்காமற் கொட்டார்க ளுலகத் தோர்கள்;
சமயமெல்லாம் அம்பரமாம் ஞான முண்டு
தாயைவிட்ட பாவத்தால் தவறிப் போச்சே.
போச்சப்பா ஆறாறும் பானத் தாலே
புத்தியுள்ளோர் பானத்தாற் கண்டா ரையா!
ஆச்சப்பா வாமமென்ன நிசித மென்பார்
அதன் குணமோ திரோதாயி யனுட்டா னந்தான்!
ஓச்சப்பா நாதாக்கள் ரிடிகள் சித்தர்
உயர்ந்தவரைக் கண்டவர்பா னத்தா லன்றோ?
காய்ச்சமரம் பட்டதென்ன வேரற் றாற்போல்
கசடரென்ற அறுசமயங் கேட்டே பாங்கே.
பாங்கான குண்டலிக்குள் மூல மொன்று;
பாரப்பா கண்டத்தில் மூல மொன்று
போங்கான புருவமைய மூல மொன்று;
புகழான விந்துவிலே மூல மொன்று
வாங்கான சத்தியிலே மூல மொன்று
மருவிநின்ற பராபரத்தில் மூல மொன்று
தேங்காம லிவையாறுங் கண்ட ஞானி
சேர்ந்துநின்ற மும்மூல யோகி யாமே.
ஆமப்பா நகாரமுதல் யகாரம் நிற்கும்
அவ்வளவும் யோகத்தின் மூல மாச்சு;
தாமப்பா அகாரமுதல் உகாரந் தொட்டுச்
சாதகமாய் மகாரவரை ஞான மூலம்
ஓமப்பா திசைநாத மவுனத்திற் காணும்
உற்றேற வுற்றேற அகண்ட வீதி
காமப்பா லுண்டக்கால் யோக சித்தி
கடுங்கானற் பாலுண்ட ஞான மாச்சே.
ஆச்சிந்த வரிசைவிட்டே யுலக ஆசான்
ஆதிஅந்த மொன்றுரவி மதிதா னென்பான்;
மூச்சற்ற விடங்காட்டத் தெரியா நின்று
முன்னேது பின்னேது சாங்க மென்பான்;
வாச்சிந்த மயக்கத்தா லுலகோர் கேட்டார்
மதுவைவிட்டே றியல்லோசை யத்தோர் கேட்டார்
ஓச்சிந்த விதமறிந்தோன் யோக ஞானி
உம்மென்று ஆகுமென்ற நாத மாமே.
நாதமப்பா யோகத்தி லைந்து நாதம்
நலமான மவுனத்தி லைந்து நாதம்
வேதமப்பா கடந்திடத்தே சுத்த நாதம்
வெட்டவெளிக் குள்ளே யொரு நாதமுண்டு
போதமப்பா கடந்திடத்தே யந்த நாதம்
புகழாகச் சேவித்து நிற்கு மென்றும்
காதமப்பா தூரமல்ல அந்தோ அந்தோ!
கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்துகாணே.
விண்ணேது வெளியேது வொளியங் கேது?
விரைந்திந்த மூன்றுங்கே சரிதா னாச்சு;
கண்ணேது காதேது மூக்கங் கேது?
கண்டிப்பாய்க் கண்டவெல்லாம் அழிந்து போச்சே
ஒண்ணிரண் டேதுசம ரசந்தா னேது
உற்றுப்பார் வெட்டவெளி யொன்றுமில்லை;
எண்ணேது நினைவேதிங் கறிவு மேது?
ஏகமாய்க் கலந்துத்தி யிடத்தைக் காணே.
உத்திகொண்டு ஞானநூல் பார்த்துப் பார்த்தே
உலகத்தோர் ஞானமெல்லாம் வந்த தென்று
பத்திகொண்டே அலைவார்கள் விண்ணைப் பாரார்
பாழான மனத்தையங்கே நிறுத்த மாட்டார்
முத்திகண்ட விடமெங்கே யென்று காணார்
மூச்சற்று நின்றிடத்தை நோக்கிப் பாரார்
சித்திகண்டால் சித்திகொண்டு செய்ய மாட்டார்
சேர்ந்துமதா யிருக்கறியார் திருடர் தானே.
தானென்ற ஆணவத்தை நீக்க மாட்டார்
சண்டாள கோபத்தைத் தள்ள மாட்டார்
ஊனென்ற சுகபோக மொழிக்க மாட்டார்
உற்றுநின்ற சையோகம் விடுக்க மாட்டார்
பானென்ற ஞானவெள்ள முண்ண மாட்டார்
பதறாமல் மவுனத்தே யிருக்க மாட்டார்
வானென்ற பொருளென்ன எளிதோ மைந்தா!
மகத்தான மனமடங்க எய்யுங் காணே.
காணிந்த வுலகத்தில் மாயக் கூத்தும்
கண்மூக்குச் செவியோடிந் திரியக் கூத்தும்
பூணந்த வாசியினால் வறுமைக் கூத்தும்
புகழான செனனமொடு மானக் கூத்தும்
ஆணிந்த அண்டமெல்லாம் படைத்த கூத்தும்
ஆங்காரம் மனம்புத்தி யான கூத்தும்
தோணிந்தப் படிபடைத்த பாமே யையா!
சொற்பெரிய பூரணமே யென்று கூவே.
கூவையிலே யாத்தாளைத் தொழுது கூவக்
குறையாத கருணையினால் திரும்பிப் பார்த்துத்
தாவையிலே மதலையைத்தான் தாய்தான் சென்று
சார்வாக எடுத்துப்போ லுன்னை மைந்தா!
தேவையிலே யெடுத்தணைத்தே யுயிரை வைப்பாள்
செகசால மாடுகிற திருட்டுத் தாய்தான்
பாவையிலே மனஞ்சென்று பரவா விட்டால்
பாராது போலிருப்பாள் பாரு பாரே.
பாரப்பா செகமனைத்தும் அண்ட மெல்லாம்
பாங்கான சூழ்ச்சியில்வைத் திருந்த கன்னி
நேரப்பா இவளைவிட்டு யோகம் பார்த்தேன்
நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன்
சேரப்பா சுத்தவிழல் மனமோ பேயாம்
செகசாலக் கூத்தைவிட்டுத் தெளிய மாட்டார்
ஆரப்பா அவளை விட்டு ஞானங் கண்டோர்
அலைக்கழிக்கு மாசையென்ற பாம்பு தானே.
பாம்பையல்லோ ஆபரணம் பூண்ட ஈசன்
பரிவாக மதியோடு கொன்றை சூடிப்
பாம்பையல்லோ முந்நூலாய்ப் போட்ட கூத்தன்
பாங்கான கரியுரித்த பாணி பாணி
பாம்பையல்லோ கங்கணமாய்த் தரித்துக் கொண்டு
பரியுழுவைத் தோலுடுத்துப் பாதந் தூக்கிப்
பாம்பையல்லோ மனைக்குமோ திரமாய்ப் போட்டு
பாரென்றே அகண்டத்தி லாடி னாரே.
ஆடினதோர் கூத்தெல்லா மாத்தாள் மெச்சி
அண்டையிலே யழைத்தானை யிருத்திக் கொண்டாள்
நாடினதோ ரவளருகி லரனு மெய்வான்
நாமறியோ மவனவளு மொன்றே யொன்றே
ஊடினதோ ரிடமெங்கே? ஒலிகேட் பெங்கே?
ஒன்றாகக் காணுகிற நடன மெங்கே?
கூடினதோ ரகண்டத்தின் சோதி யெங்கே?
கூசாமல் மவுனத்திற் கூடிக் காணே.
காணப்பா மகாரவரை நாத வோசை
கன்னிக்குப் பீடமடா மவுன ஞானம்
ஊணப்பா வூணப்பா நாதத் தோடே
ஒருமுனையா யொருவழியா யொன்றா யோடும்
தோணப்பா தோற்றுவதங் கொன்று மில்லை
சுத்தவெளி ரவிகோடி சூழவன்னி
ஆணப்பா மாகோடி கண்கொள் ளாதே
ஆச்சரிய மதிகமென்ற மகாரங் காணே.
மகாரமல் லோமுந்தி யாசான் சுட்டி
வழிகாட்டு முறைமையது ஞான மார்க்கம்
மகாரமல்லோ அடங்கியந்த நாதந் தாண்டி
மருவிநின்ற இடமல்லோ கேசரி மைந்தா
மகாரமென்ன மெலெழுத்தே யென்பார் மாண்பார்
மாட்டுவதை முன்றெழுத்த தென்று காணார்
மகாரமென்ன மகாரவித்தை யதீத வித்தை
வாய்திறந்து பேசாதே மௌன மாமே.
மௌனவித்தை யாதெனில்மூன் றெழுத்தே யென்பார்
மாட்டுகிற இனங்காணார் மார்க்கங் காணார்
மௌனவித்தை யாவதென் வாய்மூட வென்பார்
மாடுமுதற் குதிரையினா லாவ தென்ன?
மௌனவித்தை கேட்டார்கூட் டுறவு காணார்
வாய்மூடி வழியோடே நாதங் கேளார்
மௌனவித்தை யாசான்றான் தூண்டிக் காட்டில்
மணிமுதலாய்த் திசைநாதங் கேட்குந் தானே.
கேட்கையிலே மதியினிட மமிர்தஞ் சிந்துங்
கெடியான துவாசமுர்தங் கடந்து தோன்றும்
வாழ்க்கையிலே யாசையறும் நினைவும் போகும்
வாரிதிபோ லண்ணாக்கி லமிர்த மோடும்
தாக்கையிலே ரவிகோடி காந்தி காணும்
சச்சிதா னந்தவொளி தானே தோன்றும்
மூட்கையிலே மேலமிர்த லகரி மீறும்
மூன்றுகமும் கணமாகு மூட்டிப் பாரே.
மூட்டையிலே யுலககிரி கொண்டு மூட்டு
முதிர்ந்தபின்பு விண்ணுள்கிரி வந்து காக்கும்
கூட்டையிலே மகாரத்தை யறிந்து கூட்டும்
கும்மென்ற நாதத்தில் கூடி யேறும்
மாட்டையிலே யறிவோடு மனத்தை மாட்டும்
மறுகாலும் நாதத்தைக் கூர்ந்து கேளே
ஓட்டையிலே யொருவழியா யோடிற் றானால்
உத்தமனே யச்சின்ன முத்தி யையா!
ஐயனே! குருவான அகண்ட மூர்த்தி!
அதிதமென்ற ஞானமெல்லாம் அருளிச் செய்தாய்;
மெய்யனே! ஏறுகிற சாதகஞ் சொல்
வேதாந்த லட்சியத்தை விளங்கச் சொல்லு
துய்யனே! நிலைதோறு மெழுத்தைச் சொல்லு
சொற்பெரிய பிராணாய சூட்சஞ் சொல்லு
தையனே! தையமென்ற நிர்த்தஞ் சொல்லு
சாதகமாய் லட்சயத்தைச் சாற்றி டாயே.
சாற்றிடென்று கேட்டமா ணாக்க னேகேள்;
சந்தோட மாச்சுதிப்போ சார்பு சொல்வேன்;
ஏற்றமென்ற மூலத்தில் வாசி வைத்தே
எளிதாகப் பிராணாயம் பண்ணித் தேறி
ஆற்றுமென்ற குண்டலிக்குள் நடனங் கண்டால்
ஆதித்தன் கோடியைப்போல் காந்தி காணும்
மாற்றுமென்ற கண்டத்தி லங்கென் றூணு
வாய்திறக்க வொட்டாது வழிசெய் வாயே.
வழியோடே நின்றுரைத்துப் பழக்க மாகி
மனோன் மணியாம் புருவமையத் தூடேசென்றே
ஒளியோடே மவுனத்தை யோட்டி யூதாய்;
உத்தமனே! சாம்பவியைக் கண்டு கொள்வாய்
நெளிவோபோ யிவ்வளவும் யோக மார்க்கம்
நின்றவனே சிவயோகி நினைவாய்க் கேளு;
தெளிவோடே விந்துவென்ற குரு பதத்தில்
தேக்கப்பா மவுனத்தைத் தாரை யாமே.
ஆமப்பா விந்துரவி மதியோர் கூடி
ஆச்சரியங் கண்கூசி மயக்க மாகி
ஓமப்பா நாதத்திற் செவிடு பட்டே
ஊமையென்ற வெழுத்துடைய வுருவங் காணும்
தாமப்பா சத்தியிலே வன்னி யோடு
சதகோடி ரவிமதியு மொவ்வா வொவ்வா
வாமப்பா லுண்டவர்க்கித் தனையுங் காணும்
வாய்பேசா ஞானிக்கு மாயந் தானே.
தானென்ற சிவத்துக்குள் மௌனஞ் சென்றால்
சதகோடி நவகோடி வன்னிரவி சோமன்
பானென்ற பரத்தின்கீழ் முப்பா ழுண்டு
பார்மகனே அகாரமொன் றுகார மொன்று
வானென்ற மகாரமொன்று முப்பா ழாக
வழங்கிற்றே அதனொளியைச் சொல்லப் போகா
தேனென்ற மொழியுடைய னமனாந் தத்தைத்
தேவிபத மென்றகே சரிதான் காணே.
காணிந்தக் கேசரத்தின் தாயின் காந்தி
கண்கொள்ளா விண்கொள்ளா கரையுங் கொள்ளா
ஆணிந்தப் பரையென்பார் அம்பரந்தா னென்பார்
அவளுக்குள் மவுனமுண் டறிவாய் பாராய்
ஊணிந்த மௌனத்தை நிட்களமாய்ப் போவாய்
ஓகோகோ அம்பரத்தி லேதோ வேதோ
தோணிந்தப் படியிருந்தால் லயத்தின் நேர்மை
சொல்லரிதாம் அப்புறத்தே சோதி தானே.
சோதியென்று பராபத்தி லறுவரை யுண்டு
சொல்லையிலே கேட்டிருப்போம் சொல்லிக் காணோம்
ஆதியென்ற மூலகுரு பேரால் மைந்தா
ஆண் பிள்ளைச் சிங்கமென்ற கொங்க ணர்கேள்
வாதியென்றா லவர்வாதி ஞான வாதி
மகத்தான குளிகையிட்ட சித்தன் வாதி
பேதியென்றால் மேருப்போ லேயும் பண்ணும்
பெருவாதி ரசவாதி பேருள் ளோனே.
பேருள்ள கொங்கணர்தாம் குளிகை யிட்டுப்
பேரான பூரணத்தி லறுவரை கண்டார்
ஆருள்ளா ருலகத்தில் வரைகுரு சொல்ல
ஆச்சரியஞ் சித்தருக்குக் கீர்த்தி வைத்தார்
நேருள்ள ரிடிகளொடு முனிவ ரையா
நேராகச் சமாதியிலே கண்டோ ருண்டு
தாருள்ள சலத்தோடுஞ் சென்றா ரில்லை
சமர்த்தான மனத்தினிடச் சத்தி தானே.
சத்தியுள்ள வாசனையாங் குரங்கு கேளு
தாண்டியல்லோ இந்திரியக் கொம்புக் குள்ளே
பத்தியுள்ளே யலைத்தடித்துப் பேய்க்கூத் தாக்கிப்
பாங்கான மனத்தையல்லோ சின்னம் பண்ணி
முத்தியுள்ள வாசலுக்கே யேறொட் டாது
முழுமோசச் சனியனப்பா ஞானத் துக்குக்
கொத்தியுள்ள வாசனையை யடக்கிப் பார்த்தால்
குருடனுக்கும் ஞானவழி கூடுங்காணே.
கூடுவதும் எப்படியோ ஞான மூர்த்தி!
குரங்கைவிட்டே அகலுகிற வழியைச் சொல்க;
நாடுவது முலகத்து வாதம் வந்தால்
நன்மனமுண் டானால்சாத் திரத்திற் சொல்வார்
ஊடுவது சாதுசங்கம் வேதாந் தம்பார்
உத்தமனே வாசனையாங் குரங்கு போகும்;
ஆடுவது தொய்தவா சனையி லேற்றும்
அப்படியே யுலகத்தி லனேகம் பேரே.
பேரான வுலகத்தில் ஞான முற்றும்
பேசாம லருகிருந்த விடத்தில் மைந்தா!
வாரான மோதத்தி லிங்க மாகும்
வாதிக்கு மேருவுக்கும் நடுவே கோடி
காரான காமத்தால் பாண்டி லிங்கம்
கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கந்
தாரான மலைதோறும் பூமி தோறுஞ்
சாற்றரிது சாற்றரிது சார்ந்து பாரே.
பாரப்பா சுயம்பில்வந்து பிட்சை யேற்றால்
பலித்ததப்பா ஞானசித்தி மவுன சித்தி;
நேரப்பா வொன்பது பேரிவரு ளாறு
நிகராகப் பெலிகொண்டோர் நீடு மூவர்
காரப்பா விண்ணையென்றால் சாவார் கர்த்தார்
காத்தாலே ஞானசித்தி கலந்து கூடும்;
ஊரப்பா வாதியைப்போல் நீங்கள் கெட்ட
உலுத்தரென்பார் சித்தர்கள்தா முரைத்தி டீரே.
உரைக்கவல்லோ ராசயோகம் வைத்தா னீசன்?
உண்டுடுத்துத் திரிவதற்கோ சொன்னா னையன்?
மறைக்கவா சனைலகிரி கொள்ளு மென்றான்
மகத்தான தெட்சணா மூர்த்தி யாசான்
நிறைக்கவல்லோ யோகமுதல் ஞானஞ் சொன்னான்
நிற்கவிட மற்றநிர் மலமாஞ் சோதி
இறைக்கவல்லோ வூறினதோர் கேணி யைப்போல்
எடுக்கெடுக்க வெழும்பும்வா சனைதான் காணே.
எழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி;
ஏகாமல் வாசனையை யடித்தோன் சித்தன்
எழும்பாமல் கருவிகளை யிருக்கச் சாடி
இருத்தினவன் சிவயோகி வாத யோகி;
எழும்பாம லடிப்பதற்குச் சூட்சஞ் சொல்வேன்;
என் மக்காள்! மவுனத்தே யிருந்தாற் போகும்;
எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால்
ஏதுமில்லை சுத்தவெளி யிருளும் போச்சே.
போச்சென்றே இருக்கிறதோர் ஞானத் துக்குப்
புகழான வல்லமைதா னென்ன மைந்தா!
வாச்சென்ற அகண்டத்துள் வரைக ளாறு
மருவினால் சடத்தோடே யவனே சித்தன்;
நீச்சென்ற வரைப்பார்த்து வாரேன் மக்காள்
நில்லுங்கோள் குகையினுள்ளே யென்று சொல்லித்
தோச்சென்ற பூரணத்திற் சொக்கி நின்ற
சுந்தரா னந்தன்வந்து தொழுதிட்டானே.
தொழுதுகொண்டு பதம் பிடித்த அகண்டத் துள்ளே
சொக்குகிறோ மென்றுசொன்ன சுந்தரமே பையா!
விழுதுகொண்ட ஆலைப்போல் நெட்டிட் டேறி
வெளிகடந்தே ஆறுகலங் கண்டு வாரேன்;
முழுதுகண்டா னென்பிள்ளை யென்று கீர்த்தி
மூட்டிவைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா
பழுதுகொண்டு வருகிறேன் திரும்பா விட்டால்
பராபரத்தில் லயிச்சிடுவேன் பண்பு பாரே.
பாரப்பா அகண்டவெளி சுத்தக் கானல்
பார்ப்பதற்கோ அங்கொன்று மிடமே யில்லை;
நேரப்பா ரவிகோடி வன்னி கோடி
நேரான மதிகோடி கண்ணோ கூசும்
ஆரப்பா அளவிட்டோர் கண்டோர் வீதி
அதற்குள்ளே செல்லரிது மைந்தா போபோ;
காரப்பா குகையொன்று பட்டங்கட்டிக்
கடுங்குளிகைச் சோடிட்டுக் கலந்திட்டேனே.
கலந்திட்டே னொருவரையில் நாத வோசை
கண்கொள்ளா வெளிக்குள்ளே கலக்கமாச்சு;
சலந்திட்டேன் மறுவரையி லிடியோ கோடி
கண்கெட்டேன் மதிக்கெட்டேன் காதுங் கெட்டேன்;
(,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,)
கலந்திட்டேன் மூவரையிற் காந்திக் குள்ளே
கடுகவந்தேன் கொங்கணரை யழைத்திட் டீரே.
அழையுமென்ற சொற்கேட்டுச் சுந்த ரானந்
தன்கணத்திற் கொங்கணரை யதிசீக் கிரத்தில்
விழைவுடனே யோடிவந்து தெண்ட னிட்டு
விரைவுடனே கொங்கணர்தா னிக்க ணத்தில்
அழையுமென்றா ரெங்களைய ருங்க ளைத்தான்
ஆச்சரியஞ் சொல்லுதற்கே யடியேன் வந்தேன்
அழையுமென்ற சீடனுக்குப் பின்னே வந்தே
அடியேன்தான் வந்ததென்று பணிந்திட் டாரே.
பணிந்திட்ட கொங்கணரை வாரி மோந்து
பராபரமே நிர்க்குணமே பண்புள் ளோனே!
அணிந்திட்ட அறுவரையிற் சொக்கிச் சென்ற
ஆதியென்ற பராபரமே யையா வையா!
மணியிட்ட சிலம்பொலியைக் கேட்ட மூர்த்தி
மார்க்கத்தை யெப்படித்தா னேறி னீரோ
கணியிட்ட நிர்மலா மனத்தி னாலே
கைலாய தேகமென்ன தங்க மாச்சு.
ஆச்சப்பா அப்படியே வரணு மென்றே
ஆசைகொண்டே யிருக்கவழைத் தனுப்பு வித்தீர்;
வாச்சப்பா மனுவொன்ற வடியே னுக்கு
மைந்தன்மேல் கடாட்சத்தால் சொல்லவேணும்
ஓச்சப்பா கொங்கணரே யுபசார மென்ன
ஓங்கினதை யுரைக்கின்றேன் கேளு கேளு;
காச்சப்பா வுலகத்தி லெடுத்த தேகம்
கைலாயச் சட்டையாங் கருவைச் சொல்லே;
கருவென்ன வொன்றுமில்லை மேரு நேரே
காணப்பா வீசானங் கைலா யமாச்சே;
உருவென்ன வெடுத்துகை லாய தேகம்
உத்தமனே நிராகார ஞான சித்தி
குருவென்ன நிர்க்குணத்தின் மவுனத் துள்ளே
குவிந்துரைத்த பெருமையின் கைலாய மாச்சே;
அருவென்ன மகாரவித்தை முட்டிக்கொண்டு
ஆதிவிர்த்த கற்பமது வுண்டு பாரே.
பாரப்பா சூதமுண்டு மவுனந் தாக்கப்
பளிச்சென்ற ஏழுசட்டை பண்ணாய்ப் போதும்
நேரப்பா அச்சடங்கை லாய தேகம்
நிமிடத்தே சித்தியாமுன் னினைவுக் கையா
ஆரப்பா வுனைப்போல நினைத்த பண்ணல்
அரிதரிது கூடாகி மூடர் பேரால்
சேரப்பா சொல்லிவிட் டேனென்ற பேச்சுச்
செப்புமுன்னே கைலாய முற்றுப் பாரே.
உற்றுநின்ற பலநூலைப் பார்த்துப் பார்த்தே
உரையாவே தாந்தசித் தாந்த மென்று
பற்றிநின்ற பரவசத்தா னென்றே உன்னிப்
பாராம லலைந்துகெட்டா ரனந்தங் கோடி:
முற்றிநின்ற விடமெங்கே ஞான மெங்கே?
(. . . . . . . . . . . . . . .)
கொற்றி நின்ற மேல்மூலத் துரிய மெங்கே?
கூடுவார் மெய்ஞ்ஞானக் குரைவி தாமே.
குறைவேது வாசனையாந் தொய்தத் தோடு
கூடவல்லோ மெய்ஞ்ஞானம் புனைந்து நிற்கும்;
மறைவேது மறையதனின் அந்த மேது?
மறைவற்று நின்றதொரு வெளியங் கேது?
துறையேது துறைக்குள்ளே சோதி யேது?
சூட்டியிருந்த விவரமெல்லாம் ஞானந் தோற்றும்
அறையேது? அல்லவென்று சமுசா ரத்துள்
அழுத்துமப்பா தொய்தத்தி னாண்மை தானே.
ஆண்மையென்றால் தொய்தத்தி ணாண்மை யல்லோ
அகண்டமுத லண்டமெல்லாம் ஞானந் தோற்றும்
மாண்மையென்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில்
மண்ணையள்ளிக் கூறுகொண்டு மலங்கப் பார்த்துக்
கேண்மைகொண்டே யுககெல்லாங் கெடுத்தே ஆட்டிக்
கெடியான பெண்ணுபொன் னாணி னாலே
தான்மையென்ற பிறப்பிறப்பை மீறப் பாய்ந்து
சண்டாளக் கோபத்தைத் தள்ளு தள்ளு.
தள்ளுகின்ற வுறுப்பு வந்தால் கருவைக் கேளு;
சாதகமாய்க் குண்டலிக்குள் வாசி வைத்துத்
தெள்ளுகிற பிராணாயம் பண்ணித் தீருந்
திரண்டொலியுஞ் சிலம்பொலியுங் காணும் காணும்;
நள்ளுகின்ற கண்டத்தே யங்கென் றூணும்
நலம்பெரிய புருவமையந் திறந்து போகும்
அள்ளுகின்ற கனிபோலே யமிர்தம் வீழும்
அப்பொழுது காயசித்தி யறிந்து கொள்ளே.
அறிந்திந்த மதியான விந்து விட்டும்
அப்பனே யோகமிதே யறிந்து கொள்ளு;
பரிந்திந்த விந்துமுதல் நாதஞ் சித்தி
பாங்கான சிவத்தோடு பரந்தான் கேளு;
அறிந்திந்தப் பராபரத்தோ டாறுகேளு
அப்பனே மவுனத்தைத் தூக்கிக் கொண்டால்
செறிந்து நின்ற ஞானத்தின் யோக மாச்சு;
செயல்தம்ப மவுனத்தைச் சென்று காணே.
காணப்பா பராபரத்தின் மேலே யாறு
கைவிட்ட அகண்ட முநிர்க் குணத்தா னொன்று
பூணப்பா நிர்க்குணந்தான் நிராகா ரந்தான்
புகழான நிர்மலந்தான் போதத் தந்தம்
தோணப்பா விவையாறுங் காணப் போகச்
சொல்லுகிற வார்த்தையென்றால் கேட்டி ருப்போம்
ஊணப்பா சடம்விட்டே அறிவு விட்டே
உற்று நின்ற அண்டத்தே யறித்து கொள்ளே.
அறிந்து கொள்ளு மதியளவு பிண்டத் துள்ளே
அப்பனே யாறுதலம் அறிந்து காணும்;
அறிந்து கொள்ளு விந்துவின்மேல் பரத்தின் மட்டும்
அறிவுக்குள் சக்கரந்தா னப்பா கேளு;
அறிந்து கொள்ளு பரத்தின் மேல் போத மட்டும்
ஆதார நிர்மலத்தின் வரைக ளாறும்
அறிந்துகொள்ளு மேலாறுங் காணப் போகா
ஆச்சரியம் கொங்கணரை விட்டுக் காணே.
காணப்பா தசதீட்சை கடந்த பின்பு
கைவிட்ட சூத்திரத்தை யாசான் காட்ட
ஊணப்பா அது மவுனம் மற்ற தெல்லாம்
உரவார்த்தை அகாரமுத லுகாரமென்பார்
வீணப்பா சிரமேல்வே தாந்தக் காட்சி
விரைந்ததிலே யும்மென்றே ஊணென் பார்கள்
பூணப்பா வும்மென்ற நாத மாமோ
போக்கறியான் சொல்லுகிற ஞானந் தானே?
தானென்ற விடங்காட்டி நாதங் காட்டிச்
சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி
வானென்ற வெளியோடறு தலமுங் காட்டி
வாய்மூடி னாதிக்க வகையும் காட்டி
ஊனென்ற வுடம்பைவிட்டுக் கேசரியுங் காட்டி
ஊமைநின்ற விடங்காட்டி யுரைக்கப் பண்ணிக்
கோனென்ற குருவெனும் வாய் பேசலாமோ
குறும்பரே குருசொல்ல விரண்டு மாமே.
ஆமிந்த வுலகத்தோர் ஞான வீதி
அறிந்தேறிக் கூடுவதும் அரிது மெத்த
ஓமிந்தக் குண்டலியைத் தொட்ட ரற்ற
ஊதுவது கடினமெத்த யோக மார்க்கம்
வாமிந்த வாமத்தே நின்று கொண்டு
மகத்தான பானமுண்ண வாய்க்கும் ரண்டும்
சோமிந்தச் சடைவைத்துச் சின்மயம் காட்டும்
சொற்பெரிய பூரணந்தான் சொன்ன வாறே.
வாறான குருவினுடை வாழ்க்கை கேளு
மகத்தான சடையின் மேல் மதியுஞ் சூட்டித்
தாறான நெற்றியிலே தீயை வைத்துச்
சர்ப்பமல்லோ ஆபரண மாகப் பூண்டு
வீறான கரித்துகிலை மேலே போர்த்து
விளக்கியதோர் புலித்தோலை யிடையிற் கட்டிக்
கூறான சுடுகாட்டிற் குடியு மாகிக்
கொள்கின்றார் பலியெடுக்கக் கொள்கின் றாரே.
பலியெடுத்த குருவினிட வாம பாகம்
பகிர்ந்துநின்ற என் தாயின் பரிசு கேளு;
பொலியெடுத்த அட்டமா சித்திநிற்கப்
புகழ்பெரிய ரத்னவகை யாரம் பூண்டு
நலிவில்லா யோகாப்பி யாசஞ் செய்து
நண்ணுமிரு பதச்சேவை காண்ப தற்கே
ஒலியெடுத்த நவகோடி தேவர் சித்தர்
ஒன்றாகக் கணநாதர் போற்று வாரே.
அறிந்துகொள் என்தாயே துரைப்பெண் ணப்பா!
அப்பனோ எருதேறும் ஏழை யேழை
அறிந்துகொள் இவளைமுன்னே யையா வைத்தே
ஆதரித்துக் கேட்டதெல்லா மருளிச் செய்வாள்
அறிந்துகொள் அகண்டத்தே ஞான சக்தி
ஆத்தாளைப் பூசித்தா லறுப தீவாள்
அறிந்துகொள் சடமெல்லா மவளே யாச்சே
அப்பனுக்கு மெலும்போடு நரம்பி ரண்டே.
இரண்டான வாயுவினி லொன்று சத்தி
ஈராகச் சிவமேது பிராண வாயு
ஒன்றாக நாடிநின்றால் சுழுனை யாச்சு
யோகமுமாம் ஞானமுமா முற்றே யேறு
தண்டான சுழுமுனைதா னடுவில் நிற்குஞ்
சாதகமா யிதற்குள்முக் கிரந்தி யுண்டு
நன்றான சுழுமுனையிற் பிராண னேரில்
நாதாந்த யோகமிது நாடிக் காணே.
காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகங்
கண்டுகொள்ளு தாமரையில் நூல்போ லாடும்;
ஊணப்பா அதிலிரட்டி யபான வாயு
உற்றுநின்றி ரண்டையுநீ கண்டா யானால்
பூணப்பா விதற்குள்ளே ஞான யோகம்
புசுண்டருக்குச் சித்திகை லாய தேகம்
தோணப்பா நவகோடி மானா கண்டார்
சுகயோக மாவது இந்தத் துறையு மாமே.
ஆமப்பா ஆசைவிடக் கருவைச் சொல்வேன்
அறிந்துகொண்டே அறிவாலே நின்று பாரு;
சேமப்பா திரோதாயி யாரென் றக்கால்
செகமெலாம் பெண்ணான வுருத்தா னப்பா!
ஓமப்பா பொன்மண்வா சனையி னாசை
ஒற்றிநின்ற விந்திரிய மயக்கத் தாசை
நாமப்பா வென்றுசொன்ன ஆண்மை யாசை
நல்வினைக்குந் தீவினைக்கும் வித்து மாச்சே.
வித்துக்குள் பாவமென்ன புண்ய மென்ன
வெகுகோடி புண்ணியத்தால் புருட சன்மம்
புத்துக்குள் வெகுகோடி பாவ புண்யம்
பாழான பெண்செனன மெடுத்த வாறு
கொத்துக்கு ளிவையறிந்து பாவ மான
குழிக்குள்ளே வீழ்ந்தாரே கோடி யையோ!
எத்துக்கு ளிவையறிந்து வேறாய் நின்றே
இகழ்ந்தவனே மெய்ஞ்ஞான வீச னாமே.
பூரணமே யகண்டமே யகத்தி னந்தம்
பொங்கிநின்ற நிர்க்குணமே யென்னை யீன்ற
காரணமே யலகிற்பெண் ணாசை போலக்
கலந்துநின்ற சுகமில்லை கருதிக் கொண்டேன்.
ஆரணமே யதீதத்தில் சுகந்தா னென்ன
அப்பவே சொல்லுகிறே னறிந்து கொள்ளு;
காரணமாங் குவிமுலையா ளாசை விட்டால்
மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே.
நேரான பெண்ணாசை நீங்கிற் றானால்
நிலையான திரோதாயி மாய்கை போச்சு
தூரான வேதாந்த வெளியிற் சொல்வார்
சும்மென்ற சகஞ்சொல்வா யோகி யல்லை
வாராய்நீ யென்மகனே பெண்ணாற் சிக்கி
மகத்தான ரிடிகள்சித்தர் கோடி கெட்டார்;
தாரான சித்தரோடு பஞ்ச கர்த்தாள்
தயங்கி நின்று படும்பாடு சாற்று வேனே.
சாற்றுவேன் வீதிபடு குழிதா னுண்டு
தன்மேலே புல்லோடு செடியு மூடி
மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்த
வாறொக்கும் பெண்ணான மாயக்கூபம்
ஆற்றுவே னென்றாலு மாற்றப் போகா
அரகரா பெண்ணரவு கடித்த தானால்
போற்றுவே னென்றாலும் பொல்லாக் காமம்
பொறிவிட்ட நெய்போலப் பொங்கும் பாரே.
பொங்குகின்ற காமமென்ன? சிவத்தின் கூறு;
பொல்லாத ஆசையென்ன? மாலின் கூறு.
மங்குகின்ற மோகமென்ன? மகேசன் கூறு;
மருவியந்த மூன்றாலு முலகம் பாழாய்த்
தங்குகின்ற யோகம்போய் ஞானம் பாழாய்ச்
சமாதியெல்லா மிந்திரியச் சார மூடித்
தொங்குகின்ற மோட்சத்தின் தரைபோ லாகச்
சூனியமாய் ஞானமெல்லாந் தோற்று மாறே.
வெட்டினார் மௌனியந்த விந்து பாம்பை
வேதாந்த மென்றதொரு வாளி னாலே
தட்டினார் மாய்கையைத்தான் சண்ணிக் கீழே
சச்சிதா னந்தவெள்ளச் சார்பி னாலே;
ஒட்டினா ரொட்டினநிர்க் குணத்தின் மட்டும்
உத்தமனே யதுவல்லோ ஞான வீதி?
தெட்டினார் தெட்டினார் சகல ரெல்லாம்
செகசால வித்தையென்று தெளிந்து பாரே.
தெளிவதுதா னெளிதல்ல வாய்ப்பேச் சல்ல;
சிங்காரப் பெண்கண்டால் ஞானம் போச்சு
அழிவதுதான் சடலத்துக்கே யடுத்த கூறாம்
அதரமுண்டு கூடுது போக மென்பார்
கழிவதுதான் காலேது வாசி யேது
கைவிட்ட மைதுனத்திற் கலப்ப தேது?
ஒழிவதுதா னெந்நாளோ வென்று லோகர்
ஒருகோடி மாண்டார்க ளூன்றிக் காணே.
காணப்பா பிறப்பிறப்புப் பெண்ணா லாச்சு;
கைகடந்த மாயமெல்லாம் பெண்ணா லாச்சு;
பூணப்பா இந்திரியம் பெண்ணா லாச்சு;
புகழ்பெரிய வாசனையும் பெண்ணா லாச்சு;
தோணப்பா மனம்புத்தி யாங்கா ரத்தில்
சொக்கிச்சுப் பெண்ணாலே சூட்டிப் பாரு;
ஊணப்பா வூணப்பா வுரைக்கச் சொன்னேன்;
உலகத்திற் றிரியாதே விண்ணி லாடே.
ஆடையிலே விண்ணுக்குட் சித்தர் கோடி
அந்தந்த மலைகளினால் தாக்க வோடி
ஊடையிலே யண்டத்தில் முனிவர் கோடி
உற்றுநின்ற பதமளவும் ரிடிகள் கோடி
தேடையிலே சதாநித்தம் வேதம் பாரு
சேர்ந்துநின்ற வோசையிலே தெளியச் சொல்வார்
நாடையிலே யெந்நேரம் மவுனம் நாடு
நரகமாம் வாசனைதான் நன்றாய்க் கேளு.
கேளப்பா இதைவிட்டே யுலக ஞானி
கேட்டதெல்லாஞ் சொல்லுகிறேன் மக்காள் மக்காள்!
நாளப்பா செகமெல்லாஞ் சாங்க மென்பான்
நலமான நூல்பாரான் தீட்சை யாவான்
காளப்பா மவுனமென்பான் விண்ணைப் பார்ப்பான்
காதகத்தை விட்டுச்சீ வனத்திற் செல்வான்
நாளப்பா தினந்தோறுந் தர்க்கம் பேசி
நலமான பெண்ணோடு மயங்கு வானே.
மயங்குவான் பொன்தேடப் புரட்டும் பேசி
மகத்தான ஞானமெல்லாம் வந்ததென்பான்;
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்;
சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்;
தியங்குவான் நோய்வரிற்பூ ரணமே யென்பான்;
செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து;
முயங்குவான் சமாதிவிட் டேனையோ வென்பான்
மூடமொற்ற ஞானமெல்லா முலகிற் பாரே.
பாரப்பா சரீரமிது சமாதிக் காக!
பாழான தூலமிது வென்பார் கோடி
நேரப்பா வாதம்வந்தால் ஞானம் என்று
நேரப்பா அலைந்தவர்கள் கோடா கோடி;
ஆரப்பா வுலகத்தில் ஞானி யுண்டோ?
ஆராய்ந்து நான்கண்டே னென்பார் கோடி;
ஏரப்பா அழுதலோவெள் ளாமை யாகும்?
ஏரில்லா னறுத்தடித்த கதையு மாச்சு.
கதையாச்சே யுலகத்தில் ஞானம் வாதங்
கைகண்டாற் சொல்வாரே கல்போல் நெஞ்சே!
அதையாச்சே யிதையாச்சே யென்று சொன்னால்
அவன்கையி லொன்றுமில்லை யறிந்து கொள்ளே;
உதையாச்சே அரனுடனே தொழிலே நித்தம்
உதுவான வன்வாதி யுண்மை கேளு;
சுதையாச்சே ஆனாலும் பொங்கி யுள்ளம்
சுடுவான்பார் ரசயோகி ஞானி தானே.
தானென்ற வாதியிலே யிருவ ருண்டு;
சண்டாள வாதியென்றா லுண்டு டுத்து
வானென்ற ஞானமென்ன வேதை பின்பு
மகத்தான பெண்ணோடே கூடி யாடிக்
கானென்ற ராககே ளிக்கை பார்த்துக்
கண்டபெண்ணைத் தாய்போலக் கருதிச் சென்றே
ஊனென்ற உடம்பெடுத்துப் போக வென்பான்
உலுத்தனுக்குச் செனனமென்ற நரகந் தானே.
நரகமென்ற பெண்மேலே யாசை விட்டு
நாதாந்த வேதாந்த சிந்தாந் தம்பார்;
நரகமென்ன வுலகமெலா மனத்தில் வைத்து
நலமான தேவிகிரி யையிலே நின்று
நரகமென்ன சடமுதல்நா மல்லவென்று
நாட்டினுள்ளே தசதீட்சை கடந்த பின்பு
நரகமென்ற சிவசொத்தை வறுமை தின்று
நாமறியோம் வாதமென்றே யிருப்பார் காணே.
இருக்கையிலே சதகோடித் தொழிலைச் செய்வார்;
இத்தனைக்கும் பொருளெதிவன் வறுமைக் கென்பார்;
இருக்கையிலே செயநீர்செந் தூரஞ் சுன்னம்
எடுத்தெடுத்தே யடுக்கிவைப்பார் அநேகங் கோடி;
இருக்கையிலே தொழிலெடுப்பா ரார்க்குக் காட்டார்;
இல்லையென்பா ருண்டென்பா ரனேகம் பேர்கள்
இருக்கையிலே சதாநித்த மறிவா லூட்டி
இருப்பார்கள் மவுனமுத்த வாதி யாமே.
வாதியென்றா லவன்வாதி மவுன வாதி
மகத்தான பிரபஞ்சத் திருந்தா லென்ன
வாதியென்றால் ரசவாதி ஞான வாதி
வாங்காமற் சமாதியிலே யிருந்த வாதி
வாதி யென்றால் நிசவாதி நிர்மல வாதி
வாய்திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி
வாதியென்றா லவரிடத்தே சித்தர் செல்வார்
மயக்குகின்ற செனனமில்லை முத்தி தானே.
முத்தியிந்த வாதிக்கு வருகு மென்று
மூச்சு முதற் சிவன்சொன்னா ரென்று சொல்லிப்
பத்தியிந்த சிவசொத்தைப் பெண்ணுக் கீந்து
பாழான விடயமெல்லாம் பண்ணிப் பண்ணி
அத்தியென்ற பஞ்சகத்தைப் பண்ணிப் பாவி
ஆங்காரத் தால் திரிந்தும் வேதை போட்டு
மற்று நின்றே அலைந்தவர்க்கு நரக மெய்தி
மாளுவார் கோடி சென்ம மருளு வாரே.
மருளாம லிருக்கவல்லோ வாதஞ் சொன்னார்?
மாண்டிறந்து மாண்டிறந்து பிறக்கை நன்றோ?
வெருளாமல் மனம்பிடித்த வாதி யானால்
வெகுசுளுக்கே யேறுதற்கு ஞான வீதி
அருளாமோ பொருளாமோ வென்றே யெண்ணி
அலையாமல் நின்றவனே ஆதியோகி
இருளாமோ வெளியாமோ வென்றே யெண்ணி
ஏகவெளி சுத்தவிரு ளாகிப் போமே.
ஆகவப்பா விருப்பத்தோ டஞ்சு நூறும்
அறைந்திட்டேன் வாதத்தை யறிந்து கொள்ளு;
ஆகவப்பா இதற்குள்ளே ஞானம்நூறு
அப்புறத்தே சொன்னதொரு ஞானம்நூறு
ஆகவப்பா இருபத்தோ டெழுநூ றுந்தான்
அறிந்தமட்டும் சொல்லிவந்தேன் வல்லோருண்டோ
ஆகவப்பா பார்த்தேயிக பரமுஞ் சித்தி
ஆதியென்ற குருவருளால் சொன்ன முற்றே.

No comments:

Post a Comment