Tuesday 5 April 2016

சட்டை முனி ஞானம்
பின் ஞானம்
கைலாயப் பரம்பரத்தி லென்னை யாண்ட
கடவுளெனுந் தெட்சணா மூர்த்தி பாதங்
கைலாயத் தெனையீன்ற ஆயி பாதங்
கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன்;
கைலாய நிர்க்குணநிர் மலமே தேவர்
காட்டுகின்றீர் கேசரியின் மயமாய்க் கையில்
கைலாய பரம்பரையாய் வந்த பேர்க்குக்
கடைப்பிள்ளை ஞானத்தைப் பாடுவேனே;
பாடுகின்றேன் சரியையென்ன? தேவி தீட்சை
பரிவாகக் கிரியையென்ன? தேவி பூசை;
பாடுகிறேன் யோகமென்மா சற்ற அமுதம்;
பாங்கான ஞானமென்ன? மௌனத் தந்தம்
பாடுகிறேன் திடத்திரனா யீதோ கீதம்;
பாங்கான அஞ்சலிதான் மனமாந் தேகம்
பாடுகிறேன் பரன்முனிவ ளுக்கே யென்றால்
பரிவானால் ஞானவித்தை பலிக்குந் தானே.
தானென்ற ஞானத்தின் பூமி கேளு;
சாதகமா யோகமென்ற அபர வீடு
வானென்ற பூமியிலே வித்தை கேளு;
அறிவிற்கு மறிவான வுகார விந்து
வேனென்ற வெளியெல்லாம் படைத்து நின்று
வேதாந்த அண்டமென்ற மகார மாச்சு;
கோனென்ற நாதமங்கே குமுறி யாடும்;
கூப்பிட்டாற் கேளாது கண்ணும் போச்சு.
போச்சப்பா தத்துவங்க ளனித்தியப் பட்டுப்
புலன்கெட்டு நிலங்கெட்டுப் பொறியுங் கெட்டே
ஆச்சப்பா மனவரையில் மயங்கி நின்றே
ஆடுவதோர் படம்போல அசைந்து தள்ளு;
நீச்சப்பா கடநீச்சுத் திரோதாயி வெள்ளம்
நிலையேது கரையேது தவணை யேது?
மூச்சப்பா அடங்கு முன்னே மாயை வந்து
முற்றிமுதிர்ந் தளிவுதள்ளு மோசங் காணே.
காணப்பா மனவரையை மாறுக் குள்ளே
கடைத்தேறப் போகாது கறக்க மெத்த
ஊணப்பா வென்று சொன்னால் மனமூ ணாதே
உற்றுமெள்ளப் பிடித்தாலும் மாயை கட்டும்;
வீணப்பா வுலகத்தோர் ஞான மெல்லாம்;
வேதாந்த சித்தாந்த மென்பார் கோடி
தோணப்பா ஞானமென்ன கண்டிப் பில்லைச்
சுடர்கோடி யொளிபோலத் தோன்றுந் தானே.
தானென்ற நிர்மலமா மனத்தின் வீதி
தாண்டரிது தாண்டினா லறிவு போற்றும்
கானென்ற மனத்தின்சா தகத்தைக் கேளு
கற்பமுண்ண வந்துண்ணால் வாசிதோறும்
பானென்ற பாணத்தின் பாதை நில்லு
பகலாலுங் கேசரத்தில் மனந்தா னெட்டும்
வானென்ற வெட்டவெளி வடிவு காணும்
மாச்சல் மெத்த மாச்சல்மெத்த மருவி கூடே.
கூடுவது நிமைக்கு முன்னே குளிகை கூட்டுங்
கூப்பிட்டால் பூரணந்தான் கூடப் பேசும்;
ஆடுவது மனவரையில் மாயம் போக்கும்
அருவிலே சொக்கின்றி ஆட்டுவிக்கும்
நாடுவது பூரணத்தி லேற்றிக் காட்டும்
நலமான சாணையார் கெவுனஞ் சூதம்
தேடுவது சித்தருக்குக் குளிகை கெட்டுச்
செகத்தோர்க்கு வாதமென்றே தேட்டுத் தானே.
தேட்டான வரைகடந்து மனமுந் தாண்டித்
தெளிவான அறிவினுடை வரையுந் தாண்டி
நீட்டான பூரணத்தின் வரைகா ணென்று
நேரான மூன்றுவரை யேறிச் சொக்கிப்
பூட்டான பூட்டிறங்கி விட்டேன் மைந்தா
புகழான வெறுவெளியி லேறப் போகா
ஆட்டான கைலாயப் பரம்பரை வந்த
ஆச்சரிய மூலகுரு வாக்குங் கேளே.
கேளப்பா மூலர்க்குகா லாங்கி பிள்ளை;
கெடியான காலாங்கி மைந்தர் போகர்;
நீளப்பா போகர்பிள்ளை கொங்க ணர்தான்;
நேராக நான்குமுறை பேர னாகித்
தாளப்பா மேருவிலே தவசு பண்ணிச்
சாதகமாய்க் கைலாய வர்க்க மானார்;
ஆளப்பா பிள்ளையென்றா லவரே பிள்ளை;
ஆச்சரிய மின்னமுண்டு சொல்லு வேனே.
சொல்லுகிறேன் சிங்கென்று முன்னே யூன்றிச்
சோதிகண்ட பின்பதிலே மனத்தை யூன்றிச்
சொல்லுகிறேன் அங்கென்று பின்னே யூன்றிச்
சோதியிலே அக்கரங்கள் தனமுங் கண்டு
சொல்லுகிறேன் பின்பல்லோ மவுன முன்னித்
தொடர்ந்தேறித் தளமெல்லாம் பார்த்துக் கொண்டு
சொல்லுகிறேன் புருவமை யத்திற் கூடித்
துரியமென்ற அறிவினுள்ளே சொக்கினாரே.
சொக்கியல்லோ அறிவைவிட்டே அகண்ட மேறித்
துயரறவே சமாதியுள்ளே கற்ப முண்டு
சொக்கியல்லோ மூன்றுவரை சடத்தோ டொக்கச்
சுருபவரை காணவென்று துணிந்து பொங்கிச்
சொக்கியல்லோ ஏறுவதற்கிவ் விதமா மென்று
சோதித்துக் குளிகையெல்லாம் பார்த்துப் பார்த்துச்
சொக்கியல்லோ ஏற்றிவைக்குஞ் சுரூபமணியென்று
சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே.
பார்த்தறிந்தா ரிந்தமணி வாத மென்று
பரிவான கயிலாய தெட்சணா மூர்த்தி
சேர்த்தறிந்த தம்முடைய வர்க்க மான
சீடரிலே திருமூலர் சண்டி கேசர்
மாத்தறிஞ்ச சனகாதி நால்வ ரோடு
மருவிநின்ற வியாக்ரபதஞ் சலியினோடு
போக்கறிந்த வடியெனொடொன் பதுபேர் பிள்ளை
புகழான பூரணத்தி லெழும்பென் றாரே.
எழும்பையிலே நிர்மலம்போற் சடமோ காணா
தேனென்றாற் பூரணந்தா னெதுக்குப் பேசும்
எழும்பையிலே குளிகைமுதற் காண்டிற் பத்தே
ஏற்றியதோர் தீபத்தின் சுடர்போற் காணும்
எழும்பையிலே தேகமில்லை கோடா கோடி
எடுத்தசடஞ் சூட்சுமமா யிருந்த தென்றால்
எழும்பையிலே மேலெழும்பி மௌன முற்றும்
இருந்துரைத்த சமாதியுடைப் பலந்தான் காணே.
காணப்பா சொரூபமொன்று கலிதா னொன்று
கையடங்கா தட்டமா சித்தி யொன்று
பூணப்பா கைகொடுசின் மயமாந் தேவர்
பொருளோடே அருளான போக்குக் காட்டித்
தோணப்பா தோன்றிநிற்கும் சும்மா அம்மா
சுபமாக இசைந்ததிலே சொக்கு மென்பார்;
வீணப்பா மற்றதென்சின் மயத்தைக் காட்டி
வேதாந்த மூலத்தை விளம்பென் றாரே.
விளம்பினார் சனகாதி வேதங் கோடி;
விதத்தாரே மவுனத்தைச் சண்டி கேசர்
விளம்பினார் பதஞ்சலியு மனந்தங் கோடி;
விரித்தல்லோ திருமூல ரனேகஞ் சொன்னார்;
விளம்பினார் வாவாதா மென்று யானும்
விரியாம லிருநூறு ஞானம் சொன்னேன்;
விளம்பினார் வெகுவாக என்னூல் கொஞ்சம்
வேதாந்த மிருநூறும் விரைந்து காணே.
காணப்பா மும்மணிகை லாய வர்க்கம்
கழியாமற் பிள்ளைகட்கே மற்றோர்க் கில்லை;
தோணப்பா இவைமூன்றுஞ் சித்தர் சொல்வார்
சொற்பெரிய பூரணமே சொல்ல வேணும்;
வீணப்பா ஆராலும் சொல்லக் கூடா
வேதாந்த அந்தத்தில் வெளியிற் கூட்டும்
ஆணப்பா அறுபத்துநால் மரபுக் குள்ளே
ஆருமே யில்லையதை அறியார் காணே.
அறியாத குளிகையுடன் சாரணையிற் குத்து
அதன்பெருமை காணக்கொங் கணரைக் கேளு;
அறியாத அண்டமுதற் புவனம் பார்த்து
அருவியதோர் பதம்பார்த்துத் திரிந்தே ஆடிக்
குறியாகக் கற்பமெல்லா மேறிப் பார்த்துக்
கூறாத பூரணத்தைக் காண்பே னென்று
நெறியாக மனமுரைக்கக் குளிகை கட்டி
நேராக மனவரையி லேறி னாரே.
ஏறினா ரறுவரையி னியல்புங் கண்டே
இதமாக அறிவுடைய வரையிற் சென்று
தேறினார் மனமுரைத்தார் கண்டத் தேறச்
சேர்ந்தேறச் சேர்ந்தேறி வரையிற் றாண்டிக்
கூறினா ரிவ்வளவு மொன்றோ வென்றார்
கூசாமல் மருவரையில் குதிரைப் போட்டார்
மாறினால் சென்றுமணம் பிடித்துச் சென்றார்
வரைமூன்றுங் கடக்கவொரு கற்ப மாச்சே.
ஆச்சப்பா நாள்வரையி லேறும் போது
அரகரா வெகுகோடி யிடிபோல் நாதம்
மூச்சப்பா வோடாது முன்பின் றோணா
முதிர்ந்தமன மாயையினால் பின்னுஞ் சென்றார்
கூச்சப்பா ஐவரையிற் போக்கி நின்று
குருகுரென மொழிந்ததிலே மனமுந் தேறிப்
போச்சப்பா சடமொன்று நிராசை யாகிப்
புக்கினார் அறுவரையிற் புக்கினாரே.
புக்கியல்லோ சுழல்காற்றின் துரும்பு போலே
புலம்பினார் மூலருடைப் பேரன் பேரன்
மக்கியல்லோ மனம்போச்சுக் குளிகை போச்சு;
மாறாத மௌனமுன்னே மாண்டு போச்சு;
ஒக்கியல்லோ சிலம்பொலிதா னுள்ளே வாங்கி
ஓகோகோ குளிகையது கீழே வாங்கு
சொக்கியல்லோ யென்செய்வே னென்றே யேங்கித்
துரியத்தை விட்டு மெள்ளக் கீழ்க்கொண் டாரே.
கீழ்க்கொண்டார் கீழ்க்கொண்ட கொடியாஞ் சித்தர்
கேசரத்தை விட்டுமெள்ள அறிவில் நின்று
நாட்கொண்ட பாடெல்லாம் நினைத்துக் கொண்டு
நான்பிழைத்தே னான்பிழைத்தே னென்று சொல்லி
ஆட்கொண்டா என்குருபூ ரணத்தில் நின்றீர்
ஆச்சரிய மெனையீன்று மிவரை யையா!
வேட்கொண்டா யென்றவத்தை யீந்த னையா
வெறுவெளியாஞ் சிலம்பொலியை மேவென் றாரே.
மேவென்று சொல்லுமுன்மேற் கண்ட போகர்
வேதாந்த சிரோமணியைப் பெறுதி மைந்தா!
கோனென்ற குருவுக்கும் அவரே சீடர்
கோடிலட்சத் தொருசீட ருண்டோ காணேன்;
பானென்ற வேதாந்தஞ் சித்தாந் தம்பார்
பறக்கிறதோர் குளிகைமுதல் வாதம் பார்த்துத்
தேனென்ற கைலாய வர்க்க மாகிச்
சித்தருக்குச் சித்தராய் ரிஷியா னாரே.
ரிஷியென்ன சிலம்பொலியைக் கண்டா ருண்டோ
நேராக வதற்குள்ளே சேர்ந்தா ருண்டோ
ரிஷியென்ன ரசவித்தை யறிந்தா ருண்டோ
நிமிடத்தில் கவனமுற்றுத் திரிந்தா ருண்டோ
ரிஷியென்ன அண்டமுதற் புவனந் தாண்டி
நின்றநிறை யாய்க்கண்டு வந்தோ ருண்டோ
ரிஷியென்ன மவுனமுற்றுச் சுமாதிக் குள்ளே
நின்றதனால் திகைமையாய் நினைவாய்க் காணே.
காணப்பா ரிஷியாட்டுஞ் சித்த ராட்டுங்
காரணமாய் மவுனத்தே நின்றோ ராட்டும்
பூணப்பா பூரணத்தே நின்றோ ராட்டும்
பொன்னாக மரமுதலாய்ப் புகழ்ந்தோ ராட்டும்
ஓணப்பா வாசியுடைக் குதிரை யாட்டும்
ஒன்றுமற்றுத் தன்மயமாய் நின்றோ ராட்டும்
தோணப்பா யிவையெல்லாங்கொங் கணர்க்கே யல்லால்
சூழலகிற் சித்தருண்டோ சொல்லி டீரே.
சொல்லிடமாய் ஞானமுண்டோ குளிகை யுண்டோ?
சூட்சித்த கற்பமுண்டோ வாசி யுண்டோ?
மல்சுட்ட வாதமுண்டோ சுன்ன முண்டோ?
மகத்தான சிக்கியுண்டோ செயநீ ருண்டோ?
வெல்லிடீர் விடமுண்டோ சாரணை யுண்டோ?
வெவ்வேறே கூட்டுகிற குடோரி யுண்டோ?
அல்லிடீர் வேதைசகு வணந்தா னுண்டோ?
அப்பனே பதினேழு மமைத்திட் டாரே.
அமைத்தவர்முக் காண்டம்பா டியதோ ரங்கம்
வந்தித்த பிள்ளைக்கு மறிவு தோன்றும்
அமைத்தவர் பாடினபொற் கம்பி போல
அறிவுகெட்ட மிலேச்சருக்கும் வாதசித்தி
அமைத்தவர் சுருவெட்ட வெளிய தாக
அங்கங்கள் மறையாமற் சொன்னார் சொன்னார்
அமைத்தவர்பாட் டுக்குநம் முடைய நூல்தான்
அருகாக மறைப்பென்றே அறைந்திட் டாரே.
அறைந்திட்டா ரைந்நூறு பிள்ளை வேண்டி
அப்பப்பால் வெகுதெளிவு சாத்தி ரந்தான்
நிறைந்திட்ட ஆரணம் போல் வெளிய தாக
நீங்காமற் றுறந்துவிட்டா ரருளொடு பொருளும்
குறைந்திட்ட புத்தியல்நிட் களமாம் புத்தி
கூறாத பொருளையெல்லாங் கூறி விட்டார்
வறைந்திட்ட மவுனமெல்லாம் வெளிய தாக
வாய்திறக்கா வித்தையெல்லாம் விளக்கி னாரே.
விளங்கியதோர் கொங்கணரால் மூல வர்க்க
மகத்துவந்தா னுண்டாச்சு மக்காள் மக்காள்!
விளங்கியதோர் கீர்த்தியுண்டோ வுங்க ளாலே
வெட்டவெளிக் கப்புறத்தே செல்ல மாட்டீர்;
முளங்கியதோர் குளிகையென்ன காய சித்தி
மூச்சற்ற விடத்திலே நோக்க மென்ன
பிளங்கியதோர் சித்தருட வர்க்க மென்ன
பேய்மக்கள் மூவைந்து பேரிற் றானே.
தானென்று சொன்னதென்ன என்னைப் பெற்ற
சச்சிதா னந்தவெள்ளத் தயவுள் ளாரே
கோனென்ற முக்குளிகை நமக்குண் டையா
கொடியதொரு மவுனவித்தை நமக்குண் டையா
பானென்ற வாசிவித்தை நமக்குண் டையா
பாங்கான காயசித்தி நமக்குண் டையா
வானென்ற வெட்டவெளி யேறி யாடி
வருகிறேன் விடைகொடுத்து வாழ்த்தி டீரே.
வாழ்த்தியுன்னை யனுப்பினால் பூர ணந்தான்
வரைகடந்தே ஆறுவரை யேறு வாயோ?
வாழ்த்தியுன்னை யனுப்பினால் நரகத் துள்ளே
மயங்காமற் சொல்லுவையோ மைந்தா சொல்லு
வாழ்த்தி யுன்னை யனுப்பினா லிடியிற் குள்ளே
மயங்காமற் றியங்காமல் மருவு வாயே?
வாழ்த்தியுன்னை யனுப்பினா லென்ன முன்னால்
வாய்ப்பேச்சா வரைகடக்கும் மார்க்கம் தானே?
மார்க்கமென்ன எனையீன்கை லாய மூர்த்தி!
மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன்
சேர்க்கமென்ன சிவாலயங்கள் பலியேற் றுண்டேன்
சிவமேது நீரன்றி வேறு காணேன்
ஆர்க்கமென்ன குளிகையிட்டுச் சென்று போறேன்
அங்கங்கே மனந்தேறிப் போறேன் போறேன்
தீர்க்கமென்ன சொக்கினாற் சொக்கிப் போறேன்
திரும்பினால் சடத்தோடே திரும்பு வேனே!
திரும்புவையோ என்மகனே திடந்தா னுண்டோ
சிறுபிள்ளை புத்தியல்லோ செப்பு றாய்நீ?
வளர்பிறையோ தேய்பிறையோ ரவியி னுள்ளே
வருவதுபோ லல்லவது மாட்டி வாங்கும்
பரும்பிறையோ யோகமது பிறவி கோடி
பாங்கான வொளிக்குள்ளே கண்ணோ கூசும்
அரும்பிறையோ மனந்தளும்பு மேவொட் டோதே
அரகரா என்மகனே யறிவாய் நீயே.
அறியாத வரைபார்க்க நான்தா னேறி
அய்யனே மூன்றுவரைக் குள்ளே சிக்கி
நெறியாக நால்வரையி லேறொட் டாமல்
நிமிடத்தி லறிவினிலே வந்து நின்றே
மறிவானம் படைத்தகொங் கணரே சித்தர்
மற்றோரை யான்காணேன் மைந்தா சொல்லு
பொறியான வழியடக்கிச் சூட்ச மாகிப்
போனவரார் போகருடைப் பிள்ளை தானே.
பிள்ளையென்றா லவரல்லோ போக ருக்குப்
புகழான ரிஷிகளெல்லாஞ் சித்த ரென்பார்
தள்ளையென்றா லவர்தாமூ லரிடம் போன
சச்சிதா னந்தவின்ப மான பிள்ளை
கொள்ளையென்றா லவர் கொள்ளை ஞான வீதி
கொடிதான சிலம்பொலியைக் கேட்டு மீண்டார்
பிள்ளையென்று வந்ததனால் கீர்த்தி யாச்சு
வேதாந்த அந்தமெல்லாம் வெளியாய்ப் போச்சே.
போச்சென்று சொல்வதென்ன போய்வா னையா
புத்தி சொன்ன புத்தியெல்லாம் போட்டிட் டாயோ?
வாச்சென்று நின்வயிற்றிற் பிறந்த பிள்ளை
வந்தாலென் கெட்டாலென் மகத்வ முண்டோ?
கோச்சென்ற நாவமென்ன விடிந்தா லென்ன
கோடிரவி காந்தியென்ன பயமுண் டாமோ?
ஓச்சென்ற சிலம்பொலியைக் கண்டு வாரேன்
ஒருமனமாய்ப் பூரணத்தி லுன்னி டீரே.
உன்னிடீர் அண்டமுதற் புவனந் தாண்டி
ஒரு நொடிக்குட் பதந்தாண்டி முப்பாழ் தாண்டி
மன்னுதிரு வருள்மனையைக் கண்டு போற்றி
மருவியதோர் புரணத்திற் சென்றே யேறிப்
பன்னிடுவீர் தினந்தோறும் பழக்க மையா
பாயுடனே யதுநடந்து வரைக ளாறும்
தன்னிடிர்யோ கறியேனும் அருளாற் போறேன்
தயாநிதியே கடாட்சித்தே அனுப்பு வீரே.
அனுப்புவது பிறகுனையான் சென்று வாரேன்
அவ்வளவுங் குகைக்குள் நீ பட்ட மாய்நில்
தனுப்பிறந்த தளிபோலச் சென்று தாண்டிச்
சாதகமாய்ச் சொருபமணி மூன்றுங் காட்டிச்
கணுப்பிறந்த கமலியது பூண்டுங் காட்டிக்
காட்டிலே யட்டமாசித் தியினால் காட்டி
உணுப்பிறந்தோர் தாண்டிலொரு வரையி லேறி
உற்றுமறு வரைதனி லோடி னேனே.
ஓடினேன் மூவரையி லிடியோ கோடி
ஓகோகோ ரவிகோடி வன்னி கோடி
வாடினேன் மனமிளைத்தேன் மயக்க மானேன்
வாயிட்ட குளிகைசென்றே யேறிப் போறேன்
நாடினேன் கற்பமொன்று மூவரையிற் றாண்டி
நலமாக நாலுவரைக் குள்ளே சென்றேன்
ஆடினே னாடினே னறிவு கெட்டேன்
அரகரா மோசமென்றே யிறங்கி னேனே.
இறங்கினே னால்வரைக்கப் புறமே போக
என்னாலே முடியாதே யேதோ அஞ்சில்
இறங்கினே னென்மக்கா ளும்மா லாமோ
ஏதுசொன்னாய் பேய்ப்பிள்ளா யென்ன பேச்சு
இறங்கினே னிந்நாள்பின் னையார் சொல்லார்
ஏகவெளி திக்காடு மிடியோ கோடி
இறங்கினே னென்னாலே முடிவு காணேன்
ஏறினார் கொங்கணர்தா மேறி னாரே.
ஏறியதோர் கொங்கணரைப் போலே யில்லை
ஏகவெளி தீக்காட்டெப் படியோ போனார்
மாறியதோர் மனம்பிடித்தார் யோக மானார்
மாளுவது நிசமென்று வாய்மை பூண்டார்
கூறினதோ ரறுவரையைக் கண்டு முட்டக்
குமுறியதோர் சிலம்பொலியைக் கேட்டு மீண்டார்
ஆறியதோர் மனங்கண்டா ரவரே சித்தர்
ஆச்சரியங் கொங்கணர்போ லார்கா ணேனே.
காணரிது காணரிது கோடா கோடி
கண்டுநான் பாபருட்ச சித்தர்க் குள்ளே
பூணரிது பூணரிதே அகண்ட வீதி
புக்கல்லோ சிலம்பொலியைக் கேட்க மாட்டார்
ஊணரிது ஊணரிது வெளியிற் பார்த்து
ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள்
தோணரிது தோணரிதாய் நின்ற ஞானம்
சீடருக்குள் ளோடுறது துரியந் தானே.
தானென்ற பூரணத்தைச் சாங்கத் தோர்கள்
சகமெல்லாம் நிர்க்குணமாய் நின்ற தென்பார்
வானென்ற வெளியென்பா ரில்லை யென்பார்
வாய்பேசார் சொன்னக்காற் போமோ சொல்லு
கோனென்ற குருவருளால் சமாதி கூட்டிக்
குவிந்துநின்று மவுனத்தின் நிலையைப் பற்றி
ஊனென்ற வுடம்பைவிட்டே அறிவாய் நின்று
உலாவுறதே சாங்கமென்றே யுரைத்திட் டாரே.
உரைத்திட்ட காரமென்ன பிருதிவி போக்கு
ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து
மறைத்திட்ட மவுனத்துடன் மவுன மூட்டி
மருவியந்த வறிவோடே வாச மாகி
நிறைந்திட்ட அகண்டமுத்தி சென்றே ஆடி
நேரான அண்டமுதற் புவனம் பார்த்து
முறைத்திட்டந் தப்பாமற் சமாதி நின்றால்
முழுயோகி முழுஞான முமூட்சா வாயே.
ஆமப்பா விதற்கு முன்னப் பியாச மார்க்கம்
அறைகுவே னட்டாங்கம் நன்றாய்க் கேளு;
ஓமப்பா வகையாக விரித்துச் சொல்வேன்
உத்தமனே சாட்சிநித் திரையைப் போக்கு
தாமப்பா சதாநித்தம் தார கத்தே
சார்ந்துநின்ற கேசநிலை சதாநித் தம்பார்
சோமப்பால் சுழித்தோடுங் கேசரியைக் கண்டால்
சொல்லாத முத்திரையைச் சொல்லு றேனே.
சொல்லுறேன் ரவிமதியும் வன்னி கூடிச்
சொலித்துநின்ற விடமல்லோ கேசரிதா னப்பா
சொல்லுறே னதைப்பார்மனஞ் செயநீ ராகும்
சுத்தவெளி யடியோடே தாக்கி யேத்தும்
சொல்லுறேன் மனம்புத்தி சித்த மென்பார்
தொடர்ந்துநின்ற குருபதத்தைச் சூட்டிக் கேளு
சொல்லுறே னறிந்தமட்டும் புருவ மையம்
சூட்சந்தொட் டேறியட்டாங் கத்துறை கேளே.
கேளப்பா ஏமத்தைச் சொல்வே நானுங்
கெடியான நேமமூட னாசங் கொண்டு
வாளப்பா பிராணாயம் பிரத்யா காரம்
மகத்தான கியானமொடு தாரணை கேளு
தாளப்பா சமாதியுடை நிட்டை பங்கம்
தனித்தனியே சொல்லுகிறேன் நன்றாய்ப் பாரு
வேளப்பா ஏமமென்ற பத்துஞ் சொல்வேன்
வேதாந்த பொறியறிந்தோர் பெரியோர் தாமே.
பெரியோர்கள் அண்டமென்ற ஆன்மா நோக்கிப்
பேரான பரிச்சின்ன மனமு மாகி
அறியோர்கள் சாதியென்ற ஆச்சிரம் விட்டே
ஆசையென்ற விகற்பமெல்லா மடித்துத் தள்ளிப்
பரியோங்க ளிங்கிசையை நீக்கிப் போட்டுப்
பராபரத்தை நோக்குவதங் கிசம தாகும்
சரியோரா வதுஞ்சகல மதத்தி னாலுந்
தனித்தனியே கண்டிக்கப் படாதென் பாரே.
என்பார்க ளிங்கிசையா யிருக்கு மாண்பர்
எங்கெங்கும் நிறைந்திருந்த சுரூப மூர்த்தி
அன்பார்க ளிதுவல்லோ சத்தி யந்தான்
ஆரதிக ஆன்மசரீ ராதி சுபாவம்
வன்பார்க ளபகரிப்பை விட்டு விட்டு
மனமுரைத்தா லூரதிக மென்று பேரு
தன்பார்கள் பிறசரீ ராதி சுபாவந்
தானென்ற தற்குலலட் சணந்தான் பாரே.
பாரப்பா பிரமமது சுபாவ மாகப்
பரவியது நிரந்தரமுஞ் சரித்தா லன்று
நேரப்பா பிரமசரிய மிதுவாங் கண்டால்
நிரந்தரமுந் தயவினுடை நினைவு கேளு
தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கிச்
சகலசனம் நம்மைபோ லென்றே யெண்ணி
ஆரப்பா சுபானுபவ போதஞ் செய்வார்
அவரல்லோ தயவுடையோ ரறிந்து காணே.
காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை
கரைகற்ற சமயம்பொய் யென்று தள்ளி
ஆணப்பா திடப்பட்டாடட் சேப மென்பார்
வீட்சணமுஞ் சீதளமுஞ் சுகதுக் கத்தால்
வீணப்பா மானாபி மானம் வந்து
வெறும்வெளிபோற் சொப்பனமா மென்று தள்ளித்
தோணப்பா தாங்காம லகண்டத் துள்ளே
சொக்குவது சமயமென்று சொல்ல லாமே.
சொல்லலாம் வேதாந்தத் துள்ளே முத்தி
தொடுகுறியாஞ் சாத்திரத்தின் முத்தி யில்லை
வெல்லலா மதனாலே சொன்ன வெல்லாம்
வேறில்லை நாமதுதான் எனலே முத்தி
அல்லெலாஞ் சொப்பனம்போ லவத்தை யாண்டு
அகிலபிர பஞ்சமெல்லா மடுத்து மூழ்கி
நில்லலா மற்புதமாய் நிற்பிட மற்று
நிர்மலமாய் நிற்கிறபூ ரணந்தா னென்னே.
தானென்ற பூரணந்தான் நாமென் றெண்ணிச்
சதாநித்தம் மறவாம லிருந்தா னாகில்
வானென்ற கலிதகரி யாச்சு தாச்சு
மருவியதோர் சாத்திரத்தி னாலே யப்பா
கோனென்ற தன்னிடத்தே யொன்று மில்லை
கூடிநின்று போனதில்லை யென்றே யெண்ணி
வேனென்ற நிர்க்குணமும் வேறொன் றில்லை
வேதாந்தசித் தாந்தமென்றார் கௌச மாச்சே.
ஆச்சப்பா நேமத்தைச் சொல்லக் கேளு
அறைகுவேன் நன்றாகப் பூர ணந்தான்
வாச்சப்பா சத்யமென்ன மித்தை யென்ன
மருவியதோர் நானேதான் என்ற தாரு
வீச்சப்பா நமக்குவந்த பந்த மேது
வேதாந்த சாத்திரத்தில் விளங்கப் பார்த்துக்
கூச்சப்பா திடப்பட்டார் தவசென் பார்கள்
குலாமரிட்ட விடவெல்லாங் குருட்டு நோக்கே.
நோக்கப்பா பிரமமதி லோகத் துள்ளே
நுகர்ந்துநின்ற காமியத்தை நரகென் றெண்ணி
வாக்கான வெறுப்பதுசொப் பனம்போ லெண்ணி
மசகமிது வென்றுதள்ளி மனமீ தேறித்
தாக்கான பொருளல்லோ சச்சிதா னந்தம்
தடைபெறவே தானானார் சந்தோட மாச்சு
போக்கான வேதாந்தப் பிரம சாரம்
புகட்டுகிற குருச்சொல்பூ ரணமென் றெண்ணே.
எண்ணியதோர் மூன்றையுந்தா னுண்மை யென்றே
எண்ணியிருக் கிறதாரென் றியம்பு வார்கள்
தண்ணியதோர் குருவுரைத்த வுபதே சத்தைத்
தானறிந்து பூரணமாய் முத்த னாகிப்
பண்ணியதோ ரபராதம் குருவுக் கீந்து
பராபரத்தைத் தன்தேகம் போலே யெண்ணி
அண்ணியதோர் சுகமுடனே துக்க மெல்லாம்
ஆர்செய்துந் தனக்குவரம் போலுங் காணே.
காணப்பா விப்படியே தீர்த்தி யானால்
கைகடந்த சிவபூசை யென்று சொல்வார்
வீணப்பா சகலநூ லென்று தள்ளி
விரைந்து நின்ற விரத்தியெல்லாம் விட்டே யோடி
ஊணப்பா குருபிறகே நிழலைப் போலே
உத்தமனே சச்சிதா னந்த னானாய்
ஆணப்பா தேவிக்குப சரித்து வென்று
அறிகிறதே சிரவணமென் றறிந்து கொள்ளே.
அறிந்திந்த வேதநிலை விட்டு நீயும்
அப்பனே வாசனைப்ர பஞ்சந் தாண்டி
மறிந்திந்த புத்ராதி பாசத் தாலே
மாயம்வந்து முட்டையிலே கலச்சை யாக்கிச்
செறிந்தவதை யடிச்சகவே தாந்தம் பார்த்துச்
சீராக நிற்கிறதே செம்மை யாகும்
நெறிந்து நின்ற வேதாந்தப் பிரமந் தன்னில்
நினைவோடு வருகிறதே யாசை தானே.
ஆசையென்றும் மதியென்றும் அதற்கு நாமம்
அப்பனே தாம்பிரம மென்றே ஆசான்
நேசையென்ற வுபதேசப் படியே யென்றும்
நேராக வேதாந்தப் பொருளென் றெண்ணிப்
பூசையென்று மற்றதெல்லாந் தள்ளி விட்டால்
உத்தமனே சிவமென்று சொல்லு வார்கள்
காசையென்றே என்னென்ன கார்யம் வந்தும்
கைவிட்ட துக்கம்வந்துங் கலங்கி டாரே.
கலங்காமல் தாப்பிரம மென்றே யெண்ணிக்
கவடற்று நிரந்தரம்வே தாந்தம் பார்த்தே
மலங்காமல் நிற்கிறதே விரத மப்பா
மகத்தான நேமமென்ற பத்து மாச்சே
இலங்காம லிருப்பதையும் மனுட்டித் தக்கால்
என்மகனே மனந்திடமா யில்லா விட்டால்
துலங்காத சுவரில்சித் திரம்போ லாகும்
சுழியதுதா னடிப்படைமூன் றொன்றும் வாறே.
வாறாகச் சுகாசனமா யிருந்து கொண்டு
மருவியதோர் மூலத்தில்வங் கென்று பூரி
கூறாகக் கும்பித்துமாத் திரையை யேற்றிக்
குறியோடே சிகாரத்தால் ரேசி ரேசி
சாறாக விப்படியாங் கென்று கும்பி
சாதகமா யிவைமூன்றும் தீர்ந்த பின்னே
ஆறாக அகாரமுத லுகாரங் காட்டி
அப்பனே மவுனத்தாற் கும்பித் தேறே.
கும்பித்து மௌனந்தான் குவிந்த பின்பு
கொள்கியதோர் மூலத்தை விட்டு நீயுந்
தம்பித்துக் கண்டத்தே நின்றே யூது
தாலடங்கி யுரைத்தபின்மேல் மூலம் நின்று
சொம்பித்தே யறிவோடே மௌனம் பூரி
சுகமாகப் பூரணத்தை யதற்குட் கும்பி
தம்பித்து மனத்தொடுரே சகத்தைப் பண்ணு
தலமான பிரமமென்று பிராண னாச்சே.
ஆச்சப்பா இதுவல்லோ பிராணா யாமம்?
அறிந்தவனார் சிவயோகி யறியார் மற்றோர்
ஓச்சப்பா பிரபஞ்ச வாசை விட்டே
ஒன்றையுந்தான் மனத்தினுள்ளே சங்கி யாமல்
வாச்சப்பா வந்ததென்ற காரண மாக
மருவியதோர் ஞானமென்ற மார்க்கத் தூடிக்
கூச்சப்பா காமியத்தை நரகென் றெண்ணக்
கூறான கர்மமெல்லாம் விடுக்க நன்றே.
நன்றாக வேதாந்த சாத்தி ரத்தால்
நாம்சாட்சி யென்று நித்த முரைத்து நின்று
பன்றான மற்றவைநாம் அல்ல வென்று
பரவிநின்றே யுலகமெல்லாம் மித்தை யென்று
கன்றாக வுரைப்புநிரந் தரமு நினைவாய்க்
காரணகா ரியங்களெல்லாந் தவிர்ந்து போட்டு
ஒன்றான வொருபொருளாய் நின்றா யானால்
உத்தமனே பிரத்தியா கார மாச்சே.
ஆச்சப்பா மாயையொடு மாய வின்பம்
அப்பனே சுத்தசை தன்ப மூன்றும்
போச்சப்பா ஆகாயம் போலே எங்கும்
ஓடியெங்கும் மறைந்திருக்குங் கண்டா லுந்தான்
ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தி
யாகநனி தோத்திரமாய்த் தியானம் பண்ண
வீச்சப்பா பிரமமென்றே தியான மாச்சு
விளம்புகிறேன் ஐந்துவகைச் சமாதி தானே.
தானென்ற அதிட்டான சைதன் யத்தைத்
தனையளித்து நிலவறையில் தீபம் போல
ஆனென்ற அலைவற்றுத் திடம தாக
அப்பனே அகண்டமது தானாய் நின்று
வேனென்ற தோற்றமற்றே யிருந்தா யானால்
விளங்கியதோர் தத்வலயச் சமாதி யாச்சு
வானென்ற சவ்விகற்பச் சமாதி கேளு
மருவியதோர் தத்வலயச் சமாதிக் குள்ளே.
உள்ளாக இருக்கையிலே பேசுஞ் சுற்றம்
உறவாகக் கேட்டாக்கந் தாணு வித்தை
தள்ளாகச் சவ்விகற்பச் சமாதி யென்று
தாமுரையார் பெரியோர்கள் கேளு கேளு
விள்ளாகத் திரிசாணு வித்தை மார்க்கம்
விரவியந்தச் சமாதியிலே நிற்கும் போது
தள்ளாகத் தன்னையனு சந்தா னித்துத்
தலமான சந்தானந் திரிசான மாச்சே.
ஆச்சப்பா இதன்பேர்சவ் விகற்ப மென்பார்
அருளியதோர் நிருவிகற்பச் சமாதி கேளு!
ஓச்சப்பா தத்வலயச் சமாதி முத்தி
உத்தமனே சாத்தனுத்தங் கேம றந்த
ஆச்சப்பா துக்கமுற்று மிருகம்போல
ஆச்சரியஞ் சத்தமெல்லாங் கேளா விட்டால்
கூச்சப்பா சித்தமது சொரூபத் துள்ளே
கொண்டாற்பூ ரணத்தில்நிரு விகற்ப மாமே.
ஆமப்பா சமாதிவிட்டுச் சரிக்கும் போதும்
அப்பனே சாத்திரங்கள் பார்க்கும் போதும்
ஒமப்பா காலமென்ற நிறையு மில்லை
உத்தமனே பிரபஞ்ச மில்லை யென்று
சோமப்பா விகாரந்தோற் றும்ப்ர பஞ்சஞ்
சொப்பனம்போல் பாசமென்ற மதிய டக்கில்
ஆமப்பா தீவிரமாம் பிறவி யார்க்கும்
அகத்தான காரணனா மென்றே யெண்ணே.
எண்ணியல்லோ மனத்துள்ளே படாதே நீக்கி
ஏக்கமாய் நிருவிகற்ப மாகி நின்றே
அண்ணியல்லோ பிரபஞ்ச விகற்பந் தள்ளி
அனுபோக நிருவிகற்பச் சமாதி யாச்சே
ஒண்ணியல்லோ சொரூபத்தில் லயிச்சு நின்றே
உற்றிருந்த அகண்ட விர்த்தி காற்றில் தீபந்
தண்ணியல்லோ வுப்புண்டாற் போலே மைந்தா
சாதகமா யுன்னுருவங் கெட்டுப் போச்சே.
போச்சதுவுங் கடிகையென்று தானாய் நின்றாற்
புகழான பெருமை சொல்ல வென்றாற் கூடா
ஆச்சதுவு மவுனமுற்று வாயை மூடி
ஆசையற்றே இருந்தல்லோ அகண்ட வீதி
வாச்சதும்ப்ர பஞ்சத்திற் கண்ட தெல்லாம்
வாலையுட னுரைபோலும் மலைபோற் காணும்
கோச்சதுவுஞ் சிலந்தியுடை நூலும் போலக்
கூறுமத னங்கம்போற் குறியைக் காணே.
குறியன விண்ணுதித்த மேகம் போலுங்
கோதியதோர் சொப்பனப்ர பஞ்சம் போலும்
நெறியான அகண்டம் நம் மிடத்தே மைந்தா!
நேராக வுண்டாகில் இற்றுப் போற்று
பறியான வெவ்வேறு நாம மாகிப்
பாழுலகு நம்மிடத்தே தோன்றுந் தோறும்
மறியாக வழிந்துபோம் நாமே பிரமம்
மற்றொன்று மில்லையென்று மயக்கந் தீரே.
மயக்கமற்று நானொருவ னெனக்கு ளெல்லாம்
மற்றொன்று மில்லையென்று தீர னாகித்
தியக்கமற்றெந் நேரமுமுள் ளிட்டுக் கொண்டு
சேர்ந்துவருஞ் சந்தோடந் துக்கந் தள்ளி
முயக்கமற வருட்பெய்து முன்னே வந்து
முன்னின்று விகற்பங்கள் பண்ணி னாலும்
அயக்கமற்று மனதிடமாய்ச் சதமாய்த் தள்ளி
ஆராதி கொண்டகறித் தானாய் நில்லே.
நில்லப்பா சஞ்சாரத் தாலத் துள்ளும்
நேராகச் சமாதியிலே யிருக்கும் போதே
அல்லப்பா தொய்தம்வந்தா லாதரவு பண்ணி
அசையாத மலைபோல விருக்க நன்று
சொல்லப்பா கற்பமது கண்டத் தெய்துஞ்
சுட்டிநின்று திடப்படுதல் மெத்த நன்று
வெல்லப்பா வாசனையை விண்டா யானால்
மேவியதோ ராரூடச் சமாதி யாச்சே.
ஆச்சப்பா மாயையுத்தி சொல்ல வென்றால்
அனேக முண்டு; சூட்சுமமாய்ச் சொல்லக் கேளு;
வாச்சப்பா தேசத்திற் பேதா பேதம்
மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம்
ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம்
ஓகோகோ சனங்களிலே யனேக பேதம்
வீச்சப்பா புத்திகளிற் பேதா பேதம்
வெகுமோக மாயத்தாற் றோன்றுங் காணே.
காணப்பா வின்னமய மாகி நின்று
கலந்துநின்ற புராணமய கோச மாச்சே
ஊணப்பா விக்யான மயமு மாகி
உத்தமனே மனோமயமாங் கோச மாச்சு
பூணப்பா ஆனந்த மயமு மாகப்
பொங்கிற்றே யஞ்சுதிறை போதத் துக்குத்
தோணப்பா திறையஞ்சு மாயை மாயை
சொல்லுகிறேன் சூட்சத்தைப் பூட்டிப் பாரே.
பூட்டியதோர் விசிட்டனென்றும் விராடனென்றும்
புகழ்பெரிய ஏமகற்பப் போக்கே தென்றும்
நீட்டியதோ ரண்டமென்றும் புவன மென்றும்
நேரான பதங்களென்றும் மாயை யாச்சே
ஆட்டியதோ ராட்ட மெல்லாம் மாயை யாட்டே
அறிந்துகொள்ளு முன்மனமே மட்டை மாயை
மூட்டியதோர் மனமும்வந்த வரைக்கே நிற்கும்
மூதண்ட மனங்கடக்க முடியா வாறே.
வாறான வுலகத்திற் சுத்த வீரன்
மனத்தோடே போராடி யருவில் மாள்வான்
கூறான ஞானியென்றால் லிங்கம் புக்குக்
குறியான அம்பலத்தில் சேர்வா னப்பா
தாறான வுலகத்தோர்க் கடுத்த ஞானஞ்
சகத்திரமாங் கோடியிலே யொருவர் சொல்வார்
வீறான சிலபேய்கள் சாங்கம் பேசி
விழித்திறந்து விழித்திறந்து திரிவர் தானே.
தானென்ற பிரமருமோ ரறிவிற் சென்றார்
சாதகமாய் மாலென்றால் அறிவிற் றோன்றும்
கோனென்ற ருத்திரனோ ரருவி லந்தங்
கொள்கின்ற மகேச்சுரனோ ரறிவிற் றோன்றும்
வானென்ற சதாசிவனோ மணியைக் காண்பான்
மகத்தான ஐவருந்தா னாக்கிப் பீடம்
வேனென்ற பஞ்சகர்த்தாள் மட்டுஞ் சென்றால்
வேதாந்தி யெனமட்டுஞ் சொல்வார் பாரே.
பாரப்பா சித்தரென்றார் குளிகை போட்டுப்
பகுத்தறிவா ருள்மனையைப் பரிந்து போற்றி
நேரப்பா தம்மொடுபூ ரணத்தி நின்று
நேராக வோடம்போல் நீஞ்சி யாடிச்
சேரப்பா திரும்பிவந்து புகுது வார்கள்
செகத்திலுள்ள சித்தருக்கே அடுத்த வாறு
கூறப்பா பூரணத்தில் நாதந் தாண்டிக்
கொங்கணர்தாம் சிலம்பொலியைக் கூடி னாரே.
கூடினார் மூலகுரு பேர னென்று
கோடானு கோடிசித்த ராடிப் பார்த்தார்
ஆடினா ராடினா ரேற மாட்டார்
ஆச்சரியங் கொங்கணர்தா மகண்டில் சித்தர்
ஓடினா ரோடினா ரனேகங் கோடி
ஓங்கிநின்ற காகத்தி லொன்றிப் போட்டுத்
தேடினார் தேடினார் குளிகை தன்னைச்
சித்தருக்குச் சொருபனிது கிட்டும் வாறே.
வாறான சுருபமணி யாரின் வர்க்கம்
மகத்தான தெட்சிணா மூர்த்தி வர்க்கம்
கூறான தொன்றாய்நிட் களங்க மாகிக்
குவிந்துநின்ற பொருளாகிக் கூறொ ணாத்
தாரான தற்பதமாய் அதுவு மற்றுச்
சச்சிதா னந்தத்தில் நின்ற ஆசான்
பேரான பிள்ளைகட்கு மணியு மீந்து
பெரும்பாதை மகாரமென்று பேசி னாரே.
பேசியதுர்க் கந்தமென்ன வென்று கேட்டால்
பெருவிரலே நீயாய்மெய் விரலே போத
மாசியது வற்றக்காற் கவிக்கு முன்னே
மக்களே யிந்தப்பா ரென்று காட்டித்
தேசியது மகாரவித்தை சென்று கூட்டித்
செப்பாதே மகாரவித்தை குளிர்ந்த ஞானம்
வாசியதுக் கருகாகுங் கண்டு கொள்ளும்
மக்களே சின்முகத்தில் நடுப்பா லாமோ.
நடுவென்ன வெட்டவெளி யொன்று மில்லை
நானுமில்லை நீயுமில்லை மகண்ட வீதி
கடுவென்ன லகுவென்ன மனஞ் செவ் வானால்
கண்டுகொள்ளு மென்றுசொல்லிக் கரத்திற் காட்டிச்
சுடுவென்ன தாபமென்ற முளையை முந்திச்
சுடுகின்ற துத்தியென்ன மௌனத் தீதான்
விடுவென்ன இந்திரியப் பாம்பை நீயும்
விட்டகன்றே யறிவோடோ மேவு மேவே.
மேவுமென்கை லாயபரம் பரையா மாணா
வெகுகோடி ரிஷிகளுக்கு முபதே சித்தார்
மேவுமென்று சித்தரிலே யனேகங் கோடி
மேருவிலே யிருந்தார்க்கு முபதே சித்தார்
மேவுமென்றேன் னோடுபதி னாறு பேர்க்கு
விளங்கியவர் பதம்பிடிக்க வுபதே சித்தார்
மேவுமென்றே யெழுவருடன் திருமூ லர்க்கு
விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பி னாரே.
விளம்பியநா மெல்லாங்கை லாய வர்க்கம்
மேருவிலே யெடுத்தவுட லெமக்கு மக்காள்
அளம்பினதோர் சனகாதி யையர் விட்டே
அரைக்கணமும் பிரியார்க ளடியை விட்டுத்
தளம்பினதோர் கொடிக்குக்கொழு கொம்பு போலே
சதாநித்தங் காத்திருந்தோ மையா கிட்டக்
கிளம்பினதோர் பந்துபோ லனேகம் பிள்ளை
கெடியிட்டு மாட்டியங்கே கிட்டி னாரே.
கிட்டினங்கை லாயபரம் பரையி னாலே
கேளுமாச் சரியங்கொங் கணர்தாம் சென்று
கிட்டினோ மென்று சொல்லி யீசா னத்தே
கெடியான ரசமுண்டு சட்டை போக்கிக்
கிட்டினோ மீசானந் துதித்தோ மென்று
கெடியாகத் தவசிருந்து முத்த ராகிக்
கிட்டினோ மென்றுசொல்லித் தட்சிணா மூர்த்தி
கெடியான பதம்பிடித்துப் பணித்திட் டாரே.
பணிந்திட்ட கொங்கணரைப் பார்த்து நாதன்
பாருலகிற் பிறந்தவனிப் படிதா னானால்
பணிந்திட்ட சடம்போக்கிக் கைலாயத் தேக
மானதுதான் வெகுகடின மதிக மெத்தக்
கனிந்திட்ட கனிவாலே வீரத் தாலே
கலங்காமற் சமாதியுற்றுக் கயிலா யத்திற்
றணிந்திட்ட புத்திகொண் டிங்கே வந்தாய்
சாதகமா யொருவரையுங் கண்டி லேனே.
கண்டிலே னாச்சரியங் குமார னேபார்
கலந்தநற் சென்மமிவர் கைலாய மானார்
ஒண்டிலே நாலதுக்கு மகத்வ மென்ன
உற்றசிவ விந்துவிலப் படிதா னாச்சு;
கண்டிலே னிவரைப்போற் சித்தர் காணேன்
காரணமா யிவனுக்குத் தீட்சிப் பேனான்
பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா
பரம்பரமாய் வயதுதந்த மௌனந் தானே
மௌனவித்தை மூலருக்கு முன்னே சொன்னேன்
மருவியவர் காலாங்கிக் கதுவே சொன்னார்
மௌனவித்தை யகண்டாதி யறிந்து கொள்ளும்
மகத்தான போகருந்தா னுமக்குச் சொன்னார்
மற்றொன்று மயக்கமற்று மௌனத் தார்க்கு
மௌனவித்தை யெய்திக்கா லவனே ஞானி
பற்றொன்றும் வையாதே பலருங் காண
வாய்திறந்து பேசாதே மகாரம் நன்றே.
நன்றான மௌனத்திற் கடிகை சேர
நல்வினையுந் தீவினையும் நாச மாகும்
நன்றான மௌனமென்று நினைக்க முத்தி
நல்லோர்கள் நினைப்பார்கள் மற்றோர் காணார்.
நன்றான மௌனமல்லோ ரிஷிகள் சித்தர்
நாலுதிக்குஞ் சொருபமல்லோ ஞானி யானார்
நன்றான மௌனத்தைக் கண்டார் முன்னே
நலமாகக் கூப்பிடுதல் கண்டி லாரே.
கண்டிலார் மோனத்தி லனேக சித்தி
காணுமப்பா சொல்லுகிறேன் நன்றாய்க் கேளே
அண்டிலார் மந்திரங்கள் செபிக்கும் போது
அப்பனே மௌனமென்றே தீட்சை கேளு;
ஒண்டியாய் வாய்மூடிப் பேச்சு மற்றே
ஒருசேரச் சமைத்துண்ணு ஒருபோ தப்பா
விண்டிலா தெந்நேரஞ் செபித்தா யானால்
விளங்கியதோ ரேழுலட்ச மந்த்ரஞ் சித்தே.
சித்தாகுஞ் சித்தியுமா மெட்டெட் டாகுந்
திறமாக நின்றவர்க்கு மந்த்ரஞ் சித்தி
சத்தாகும் வேதமந் திரத்தைப் பாவி
சலசலெனப் பசிச்சே விப்பார் கோடி
கத்தாதும் நாய்போல கத்தி யென்ன
காசுக்கு மாகாது சித்தி யில்லை
முத்தான மௌனம்விட்டால் மனம்பா ழாச்சு
மோசமிந்த வேதமெல்லாம் பொய்யென் பாரே.
பொய்யென்றே யெண்ணியெண்ணி யுலகங் கெட்டுப்
போச்சதனா லேயுகத்தின் பேத மாச்சு;
கையென்று யோகத்தில் மௌன முட்டக்
கடுஞ்சித்தி யறிவுமட்டுங் கலந்து தாக்கு
சையென்ற நிர்த்தமப்பா ஆறிற் காணுஞ்
சாதகமாய் மேல்மூலந் தாண்டிக் காணும்
மெய்யென்று பிடித்தக்கா லவனே யோகி
விரைந்திதனை யறியாட்டால் விருதா மாடே.
விருதன்றோ வுலகத்தில் ஆசா னென்று
வேடமிட்டு வேடமிஞ்சி மோடி யேற்றி
விருதன்றோ பணம்பறித்துப் பிழைப்பா யையோ
வேதாந்த மொன்றுமில்லை சாங்க மென்பார்
விருதன்றோ கெடுத்துவிட்டா ருலகத் தோரை
வேடமென்று மயக்காலே மயங்கிப் போனார்
விருதன்றோ சீடருடைப் பாவ மெல்லாம்
விளையாட்டுப் போல்வாங்கி விழுந்திட் டாரே.
விழுந்திட்டா ரென்றறிந்து கொங்கண ரேநீர்
வெகுபிள்ளை பெற்றீர்முந் நூறு பிள்ளை
நழுந்திட்ட பிள்ளையுண்டோ திறந்தா னுண்டோ
நலமாக வுமைப்போலா னாரு முண்டோ
அழுந்திட்ட சமாதியுண்டோ தியான முண்டோ
ஆகாத பிள்ளையுண்டோ சொல்லுஞ் சொல்லும்
கொழுந்திட்ட தேவரீர் கருணை யாலே
கொஞ்சமறப் பிள்ளையிலே கூடி லேனே.
கூடாத நல்லபுத்தி சித்தர் வென்றார்
கொள்கியே வரங்கள்பூ மியிலே தட்டி
நீடாகத் தெண்டனிட்டே அழைத்துக் கொண்டு
நிமிடத்திற் குகையினுள்ளே நேர்ந்து போனார்
ஆடானா லதுமாட்டு வன்றே சித்தர்
ஆனந்த போகமுண்ட ஆண்மை யாண்மை
ஓடானா லோட்டுநிர்க் குணத்தின் விதி
ஒருமனமாய் நின்றுபுத்தி யுரைப்புத் தானே.
தானென்ற கொங்கணர்போல் பிள்ளை பெற்றால்
தங்குமடா குட்டென்கை லாய மூர்த்தி
வானென்ற சுந்தரா னந்தன் விந்து
வரவற்ற பூரணமே தாப மென்னக்
கானென்ற வெளிகடக்க அறிவோம் நாங்கள்
கரையற்ற போகத்தைப் பானஞ் செய்வோம்
கோனென்ற கைலாய பூரணமே தேவர்
கொள்கிறதோ ருற்பனமும் லயமும் சொல்லே.
சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள்
சுகமாக வாரிதியில் மேக நீர்போல்
அல்லுகிற துவலையைப்போற் பிறப்புண் டாச்சே
அதுவோங்கும் விவரமென்ன சொல்வீ ரையா.
பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு
பாங்கான ரவியங்கே நன்றாய்ப் பாரு
சொல்லுகிற கெர்பத்தில் விந்து வுன்னிச்
சிந்தூளி பரஞ்சத்தாற் சின்ன மாச்சே.
ஆச்சப்பா சனனமிந்தப் படியே யாகில்
அடங்கிறதக் கனியும்ரவி மதியுங் கூடி
வாச்சப்பா சந்திரனிற் கலந்து போனால்
மாளுகிற விதமிதுதான் குளிர்ந்து போகும்
நீச்சப்பா சின்னமொடு பாணம் ரண்டும்
நேராக மனோன்மணியைத் தொட்டு மீறாம்
ஓச்சப்பா லக்கமில்லை யெழுவகைத் தோற்றம்
உத்தமனே நாலுவகை யோனி காணே.
காணிந்தப் படியெல்லாங் கண்டு கொண்டு
கலங்காம லிருக்காமல் யுகமே கோடி
வானிந்த காயமட்டே சால மெல்லாம்
மனந்தாண்டி அறிவில்வந்த தெல்லாம் போச்சே
ஆனிந்தப் படிநீங்கள் சமாதி கொண்டே
அரைவிட்டால் குளிகையிட் டோடிப் பாரு
தோணிந்தப் படிசொன்னேன் முன்னைத் தூக்குச்
சுழற்காற்றுத் துரும்பதுபோல் மவுன மாமே.
மௌனமென்றீ ரெனையாண்ட தட்சிணா மூர்த்தி
மலர்பணிந்தே ஞானமது நூறுஞ் சொன்னேன்
மௌனமென்ற நாதாக்கள் பதத்தைப் போற்றி
வகையோடே நிகண்டாக வாதஞ் சொன்னேன்
மௌனமென்றீர் ஞானம்பொய் யென்று சொல்லி
வாகான செயமண்டி போட்டே நூற்றில்
மௌனமென்ற சமரசத்தான் மக்காள் மக்காள்
வாகான ஞானமுறை முற்றுங் காணே.

No comments:

Post a Comment